
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ள பூச்சிரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சி மருந்து குடித்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பொழுது ராஜேந்திரனின் உடலுக்கு பதிலாக வேறொரு வடமாநில நபரின் உடலை உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேந்திரனின் உடல் எங்கே என கேள்வி எழுப்பினர். ராஜேந்திரன் உடல் வடமாநில இளைஞர் உடலுக்கு பதிலாக பீகாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் திருவள்ளுவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் முயற்சியால் ராஜேந்திரனின் உடலானது மீண்டும் பீகார் மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தருமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை டீன் ரேவதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடிவில் கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.