Skip to main content

சிலம்பொலியாருக்கு இரங்கல் கவிதை

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

 

 Mourning poetry for silampoliyaar

 

 

- ஈரோடு தமிழன்பன்
இலக்கியத்தில்
இனி மாரிக்காலம் இல்லை
மேடைகள் விழாக்கள்
கருப்புடை தரித்தன
கண்ணீர்விட்டன.

இன்குலாப் என்னும்
சுடுசூரியன்
ஒருநாள்விழுந்தான்
அப்துல்குமான் என்னும்
கவிதைப் பவுர்ணமி
ஒருநாள்
விழுந்தான்
தமிழ்மண்
தாங்கமுடியாமல்
தவித்தது
இன்று
சிலம்பொலி விழுந்தார்
வானமே
விழுந்துவிட்டது.

யார் எமைத்
தூக்கி நிறுத்துவார்?
நூறு காவிய
அடர்வனங்கள் 
தீப்பற்றி எரிகின்றன
ஐயனே!
சிலம்பொலியே!
எங்கே போனீர்கள்?

உமக்குள் எமக்கான 
வள்ளுவர் இருந்தார்
இளங்கோ அடிகள்
இருந்தார்
பாரதிதாசன் இருந்தார்
உம்
ஒற்றை மரணத்தில்
ஓராயிரம் இழப்புகள்!

குற்றாலம்
வற்றியபோது
உன்னிம்தானே 
தண்ணீர் யாசகம் 
கேட்டது!
குன்றூர்க்குக்
குளிர் அதிகமெனில்
உன்னிடம்தானே 
வெப்ப ஒப்பந்தம் போட்டது.

ஆயிரம் பல்லாயிரம்
தமிழ்க் கவிதைகளுக்கு
உன் மூளைதானே
பாதுகாப்புப் பெட்டம்!

உமக்குள்
ஒரு புலவன் இருந்தான்
ஒரு
புரவலனும் இருந்தான்
ஒருசேர இருவரும்
புறப்பட்டுப் போனது எங்கே?

மாதங்களை
ஆண்டுகள் அடித்துத் தின்னுமோ?
மரணத்திற்கென்ன
அப்படிப் பாழான பசி?
உன்னை வாரிக்கொண்டு போக

மூப்பு
காரணமா?
தமிழ்தானே உன்னிடம்
மூத்திருந்தது
தமிழுக்கேது மரணம்?

காலத்திற்கு
நாட்குறிப்பெழுதும்
பழக்கம் இருப்பின்
இன்றைய நாளைத்தான்
இறந்த நாளாகத்தான்
எழுதிவைக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்” - முதல்வர் புகழாரம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Silampoli Chellappanar's fame will last as long as Tamil land exists CM

 

சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.9.2023) நாமக்கல் மாவட்டம் சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. ராமலிங்கம், பொன்னுசாமி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி ஜி. பெரியசாமி, புலவர் தமிழமுதன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இராசேந்திரன், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தலைவர் கொங்குவேள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

Silampoli Chellappanar's fame will last as long as Tamil land exists CM

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன் எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிலையையும் அறிவகத்தையும் திறந்து வைத்தேன். பேரறிஞர் அண்ணாவாலும் முத்தமிழறிஞர் கலைஞராலும் போற்றப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள், தமது 90 ஆவது அகவையிலும் குடிமக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார். தாம் பெற்ற பட்டத்துக்கு நீதி செய்த தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பார்வையற்றோருக்கான முதல் கவிதை நூல் வெளியீடு! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The first book of poetry for the blind people

 

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட மதன் எஸ். ராஜா தன் முதல் நூலான ‘கசடு’  என்ற கவிதைத் தொகுப்பை சாதாரண அச்சில் மட்டுமல்லாது, தமிழ் இலக்கிய உலகில் முதல்முறையாக அதே மேடையில் பார்வைத்திறன் குறைந்தவர்களும் படித்துக் களியுறும் வகையில் பிரெய்லி வடிவிலும் தன் புத்தகத்தை வெளிட்டார்.  

 

டிசம்பர் 4ஆம் தேதியன்று மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மு. முத்துவேலு, முனைவர் தமிழ் மணவாளன், முனைவர் நெல்லை பி. சுப்பையா, நாவலாசிரியர் கரன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்றினார்கள். விழாவில் பல நண்பர்களும் இலக்கிய, பத்திரிகை ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

 

The first book of poetry for the blind people

 

இந்த வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சமாக முனைவர் உ. மகேந்திரன், பிரெய்லி வடிவில் புத்தகம் வெளியிட்டது குறித்து, “இப்படிப்பட்ட முயற்சிகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுக்கிறது. இனிவரும் இலக்கியப் படைப்புகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்கள் கிடைப்பதற்கான வழிவகுக்கும்” என மிகவும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியதும், அவர் மனைவி ஆசிரியர் மு. சோபனா பிரெய்லி வடிவிலான புத்தகத்திலிருந்து சில கவிதைகளைப் படித்தும் மகிழ்ந்தார்.