தர்மபுரி மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் கரோனா நிவாரணப் பொருள்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் விளைபொருள்களை கழுதைகள் மூலமாக மலை அடிவாரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணத் தொகை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கன்சால்பேளு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டூர் மலைக்கு நேற்று கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இப்பொருள்கள் 200- க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், சீங்காடு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து, ஏரிமலைக்கு 6 கி.மீ. மலைப்பாதையில் நிவாரணப் பொருள்கள் கழுதைகள் மீது எடுத்துச் செல்லப்பட்டது. சாலை வசதிகள் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.