Skip to main content

'அம்மா உயிர்த்தெழுவார்...' - உடல் மீது பைபிள் வைத்து ஜெபத்தில் ஈடுபட்ட மகள்கள்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Mother will be resurrected ... Daughters who put the Bible on the body and engaged in prayer

 

மணப்பாறை அருகேயுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி. இவருக்கு திருமணமாகாத நிலையில் ஜெசிந்தா(43) மற்றும் ஜெயந்தி (40) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மேரி கடந்த சில நாட்களாக  உடல் நலம் குன்றி இருந்த நிலையில் அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேரி இறந்துவிட்டதையும் அவரது உடலை அடக்கம் செய்யாமல் மகள்கள் இருவரும் மீண்டும் உயிர் வந்து விடும் என பைபிளை சடலத்தின் மீது வைத்து ஜெபம் செய்து வந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் மேரியின் உடலை அடக்கம் செய்ய மகள்கள் இருவரிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்.

 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மகள்கள் இருவரும் உறவினரை திட்டி வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறை உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். நீண்ட நேரமாக போலீசார் கதவை தட்டியும் திறக்காத நிலையில் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்திருக்கின்றனர். உள்ளே சென்று பார்த்த போது, மேரியின் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது மகள்கள் இருவரும் தனது தாய் இன்னும் உயிரோடு தான் இருப்பதாக கூறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

 

பின்னர் போலீசார் மகள்கள் இருவரிடமும் மேரியை மருத்துவமனைக்கு கொண்டு உயிரை காப்பாற்றிவிடலாம் என சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதன் பின்பு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மேரியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து ஏழு நாட்கள் கழிந்தது எனவும் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் கூறினார். மருத்துவர் கூறியதை ஏற்க மறுத்த மகள்கள் இருவரும் தாய் உயிருடன் வந்துவிடுவார் எனக் கூறி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே மகள்களிடம் இருந்து தாயாரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.