mother who passed away due to son's rage

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏ.அத்திப்பாக்கம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி 55 வயது அஞ்சலை. இவர்களது மகன் விமல்ராஜ் (30). இவர் பெங்களூருவில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் விமல்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று (18.10.2021) இவருக்கும் இவரது தாய் அஞ்சலைக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ், தாயென்றும் பாராமல் கடும் கோபத்துடன் அஞ்சலையை எட்டித் தள்ளியுள்ளார்.

Advertisment

அப்போது நிலை தடுமாறி சுவரில் அவரது தலை மோதியதில், மயங்கிக் கீழே விழுந்தவுடன் அந்த இடத்திலேயே அஞ்சலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி மணிமொழி, திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஞ்சலையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமல்ராஜை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். தாயை மகன் கடும்கோபத்தில் பிடித்துத் தள்ளியதில் அவர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.