Skip to main content

தனிமையில் இருக்கும்போது இடையூறு; ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

mother who beat a  child with a boyfriend in salem

 

தாரமங்கலம் அருகே, ஆண் நண்பருடன் மது போதையில் சந்தோஷமாக இருந்தபோது அழுது இடையூறு செய்த குழந்தையை சுவரில் தூக்கி அடித்துக் கொலை செய்த இளம்பெண்ணையும், ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.    

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இவர், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள காடம்பட்டியில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியைச் சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி கலைவாணி (27)  ஆகியோரும் வேலை செய்து வருகிறனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களும் குடும்பத்துடன் இங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.     

 

ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் மல்லேஷூக்கும் கலைவாணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணியும் மல்லேஷூம் அடிக்கடி ரகசியமாக சந்தித்து, சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கலைவாணியால் மல்லேஷை பிரிந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர், தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லேஷூடன் சென்றுவிட்டார். ஓமலூர் அருகே புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் அவர்கள் இருவரும் கணவன், மனைவி எனக்கூறி வேலைக்குச் சேர்ந்தனர். கலைவாணியை அடையத் துடித்த மல்லேஷூக்கு அவருடைய குழந்தையை ஏற்க மனமில்லாததால், குழந்தையை வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னால் அந்தக் குழந்தையை ஏற்க முடியாது என மல்லேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

 

இதன்பிறகு ஒருவழியாக சமாதானம் அடைந்த  அவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அதே போதையுடன் இருவரும் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில், குழந்தை அழுது இடையூறு செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் குழந்தை என்றும் பாராமல் தூக்கி சுவரில் அடித்துள்ளனர். பலத்த காயம் அடைந்த குழந்தையை மறுநாள் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு  சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உயிரிழந்தது. இதற்கிடையே, கலைவாணியும் மல்லேஷூம் குழந்தையை சுவரில் தூக்கி அடித்ததால்தான் குழந்தைக்கு காயம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தாரமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்தாக காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.