பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றிய மகனைத் திருத்துவதற்காகத் தற்கொலை நாடகமாடிய தாய் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஏ.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணவேணி. அரசுப் பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வந்தார். இருக்கு ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரது மகன் அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது மகனை ஆசிரியை கிருஷ்ணவேணி கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் மகன் திருந்தாத நிலையில் ஒரு கட்டத்தில் மனமுடைந்த ஆசிரியை தற்கொலை செய்து கொள்வதாக மகனிடம் தெரிவித்து அவனது முன் தூக்கிடுவது போல் நடித்துள்ளார். ஆனால் அவரது மகனோ இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். தொடர்ந்து கீழே இறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி நின்று கொண்டிருந்த ஸ்டூல் விலகி கழுத்தில் மாட்டியிருந்த கயிறு கழுத்தை நெருக்கியதால் கிருஷ்ணவேணி உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த செங்கோட்டை போலீசார் கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.