Skip to main content

‘பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை... கழிப்பறை குழாய்க்குள் பெண் குழந்தை’ - பாட்டியின் கொடூர செயலால் கதறும் தாய்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

 Mother screaming at grandmother’s cruel act
                                                                           சாந்தி

 

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் ஷேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி (45). இந்த தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (24) படிப்பை முடித்த கையோடு பாஸ்கரன் (31) என்பவரைக் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவலை அறிந்த சாந்தி மகளுடன் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மதுரையிலிருந்து கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள சேரன் நகர் நாகப்பா காலனிக்கு வந்துள்ளனர்.

 

அப்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக சாந்தியும் உடன் வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை அன்பாக கவனித்தும், பராமரித்தும் வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை (21.10.2021) இரவு ஐஸ்வர்யா மருத்து வாங்குவதற்கு கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது. கதவை பலமுறை தட்டிய பிறகே சாந்தி கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்போது ஐஸ்வர்யா தனது குழந்தைகளைத் தேடி ஓடினார். குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார் சாந்தி. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று தேடியபோது, ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது.

 

பெண் குழந்தையைத் தேடியபோது, அந்தக் குழந்தை வீட்டின் கழிவறை குழாய்க்குள் அழுத்தி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பெண் குழந்தையை மீட்ட ஐஸ்வர்யா, படுக்கையில் கிடந்த ஆண் குழந்தையைத் தூக்கச் சென்றபோது குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். இதற்குள்ளாக வீட்டில் இருந்த சாந்தி அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவருக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இறந்த ஆண் குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பி ஓடிய சாந்தியை பிடிக்க போலீசார் மதுரை விரைந்தனர். போலீஸ் விசாரணையில், “தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர், மேலும் அவருக்கு அவ்வப்போது மனநிலை மாறும். அப்படிபட்ட சூழலில் ஏதாவது செய்திருக்கலாமோ?” என கூறியுள்ளார் ஷேக்ஸ்பியர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.