Skip to main content

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்; போலீசார் விசாரணை

Published on 23/04/2023 | Edited on 23/04/2023

 

Mother poisoning two children; Police investigation

 

கிருஷ்ணகிரி அருகே தாய் ஒருவர் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கோழிநாயக்கன்பட்டி சேர்ந்தவர்கள் குணசேகரன்-தெய்வா தம்பதியினர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. முதுகலை முடித்த தெய்வா துணை ஆட்சியர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்த குணசேகரன் அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு அவரை படிக்க வைத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி வந்த குணசேகரனுக்கும் மனைவி தெய்வாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அதனையடுத்து குணசேகரன் திருப்பூர் சென்ற நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் தெய்வா வீட்டின் கதவை திறக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்றபோது வாயில் நுரை தள்ளியவாறு இரண்டு குழந்தைகள் சடலமாகக் கிடந்தனர். அருகில் தூக்கில் தொங்கியபடி தெய்வாவின் சடலம் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கல்லாவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகனின் வருமானம் தெய்வாவை படிக்க வைக்கவே செலவாகிறது என குணசேகரனின் பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த தற்கொலை சம்பவத்திற்கு அதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்