Skip to main content

கணவரின் தாயை அடித்துக் கொன்ற மனைவி கைது! 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

mother in law passes away police arrested daughter in law

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியன், சின்ன பாப்பா தம்பதி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகனான பாஸ்கர்(36), திருமணமாகி சங்கீதா என்ற மனைவியுடன் அதே ஊரில் தனித்து வசித்து வருகிறார். 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர் ஒரு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். விபத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றி உள்ளனர். இதன் பிறகு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பாஸ்கரால் முன்பு போல வேலைகள் செய்து சம்பாதிக்க முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில், அவரது மனைவி சங்கீதா 100 நாள் வேலைத் திட்டத்திற்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவருக்கு அங்கு வேலைக்கு வரும் ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊர் மக்கள் சங்கீதா மாமியார் சின்ன பாப்பாவிடம் தெரிவித்துள்ளனர். அவர் தனது மருமகள் சங்கீதாவை கண்டித்துள்ளார். இதனால் சங்கீதா, மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது.

 

இது சம்பந்தமாக நேற்று சின்ன பாப்பாவுக்கும் சங்கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சங்கீதா, அங்கு கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து மாமியாரை பலமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சின்ன பாப்பா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர். அங்கு வந்த மருத்துவக் குழுவினர், சின்ன பாப்பாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து செஞ்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து சின்ன பாப்பா உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இது குறித்து சின்ன பாப்பாவின் மகன் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருமகள் சங்கீதாவை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.