Skip to main content

கணவரிடம் சொல்லிவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்..! இரண்டு குழந்தைகள் பலி..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

Mother in critic babies passes away

 

சென்னையைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன், இவரது மனைவி சம்சுன் நிஷா, வயது 29. இவர்களுக்குத் திருமணமாகி ஷப்ரின் என்ற 12 வயது மகளும் ஷபீர் என்ற 8 வயது மகனும் உள்ளனர். நிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் இறந்துவிட்டார். 

 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கேசவன் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது ஷெரிப் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து நிஷா தனது மகன், மகள் மற்றும் கணவர் ஷெரீப்புடன் கள்ளக்குறிச்சியில் தற்போது வசித்து வந்துள்ளார். ஷெரிப் கேட்டரிங் படித்துள்ளாதால் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். 

 

நேற்று (14.02.2021) மதியம் நிஷா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தானும் தனது பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, செல்ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷெரீப், தனது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஷெரீப்பின் தாய், தந்தை ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் நிஷாவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடபட்டிருந்தது.

 

குரல் கொடுத்துப் பார்த்துள்ளனர், உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் ஒரே சேலையில் தாய், மகள், மகன் மூவரும் தூக்கில் தொங்கியுள்ளனர். உடனே மூன்று பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இரண்டும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் நிஷா மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். 

 

தற்போது அவர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து நிஷாவின் அண்ணன் அப்சரவி, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்