திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சக்திவேல்(27). இவருக்கு நித்யா(25) என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலேஷ்(4) என்ற மகனும், பவ்யஸ்ரீ என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
சக்திவேல் திருச்சியில் உள்ள பனனா லீஃப் ஹோட்டலில் சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பழைய ஓட்டு வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு பெய்த மழையில் சுவர் ஈரமாக இருந்ததால், விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சக்திவேல் இரவு 8 மணிக்கு மேல், வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் சுவர் இடிந்து மீது விழுந்தது. இதில், நித்யாவும் குழந்தையும் சிக்கிக் கொண்டனர்.8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது. நித்யா படுகாயம் அடைந்திருந்தார்.
தகவலறிந்தஅக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த தாய் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.