Skip to main content

வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய், மகன் சடலம்! காவல்துறை தீவிர விசாரணை!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Mother and son passed away near krishnagiri

 

ஊத்தங்கரை அருகே, வீட்டுக்குள் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களை, எரித்துக் கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி செங்கல்பட்டியைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (55). தெருக்கூத்து கலைஞர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொழில் தொடர்பாக தாமரைக்கண்ணன் அடிக்கடி ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பத்திற்குச் சென்று வந்ததில் அந்த ஊரைச் சேர்ந்த கமலா (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

 

கமலாவின் மகளுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மகன் குரு (17) பிளஸ்2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தாமரைக்கண்ணன், மூன்றாவதாக சத்யா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்து என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் முத்து, 6ம் வகுப்பு படித்து வருகிறான். 

 

இதற்கிடையே, கமலாவுக்கும் சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 13ம் தேதி, கமலாவும் அவருடைய மகன் குருவும் வீட்டில் தூங்கச் சென்றனர். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சிதறிக்கிடந்தது.

 

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கல்லாவி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்தனர். கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கமலாவும், குருவும் தீயில் எரிந்து உடல் கருதிய நிலையில் கிடந்தனர். அவர்களை எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரண்டு சடலங்களும், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 


கமலாவும் அவருடைய மகனையும் எரித்துக் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? தவறான தொடர்பு காரணமாக நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ஊத்தங்கரை டி.எஸ்.பி அலெக்சாண்டர் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்