Skip to main content

வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய், மகன் சடலம்! காவல்துறை தீவிர விசாரணை!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Mother and son passed away near krishnagiri

 

ஊத்தங்கரை அருகே, வீட்டுக்குள் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களை, எரித்துக் கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி செங்கல்பட்டியைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (55). தெருக்கூத்து கலைஞர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொழில் தொடர்பாக தாமரைக்கண்ணன் அடிக்கடி ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பத்திற்குச் சென்று வந்ததில் அந்த ஊரைச் சேர்ந்த கமலா (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

 

கமலாவின் மகளுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மகன் குரு (17) பிளஸ்2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தாமரைக்கண்ணன், மூன்றாவதாக சத்யா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்து என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் முத்து, 6ம் வகுப்பு படித்து வருகிறான். 

 

இதற்கிடையே, கமலாவுக்கும் சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 13ம் தேதி, கமலாவும் அவருடைய மகன் குருவும் வீட்டில் தூங்கச் சென்றனர். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சிதறிக்கிடந்தது.

 

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கல்லாவி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்தனர். கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கமலாவும், குருவும் தீயில் எரிந்து உடல் கருதிய நிலையில் கிடந்தனர். அவர்களை எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரண்டு சடலங்களும், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 


கமலாவும் அவருடைய மகனையும் எரித்துக் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? தவறான தொடர்பு காரணமாக நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ஊத்தங்கரை டி.எஸ்.பி அலெக்சாண்டர் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.