Skip to main content

சிறுமி வன்கொடுமை! ஆண் நண்பருடன் தாய் போக்சோவில் கைது! 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Mother and her Boy Friend arrested in pocso

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மகள் வைஷாலி (15) (தாய் மற்றும் மகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கருத்து வேறுபாடு காரணமாக, தேவிகா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பிரகாஷ் (40) என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். 

 

சிறுமி வைஷாலி உள்ளூரில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தாள். சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருந்த தேவிகா, அதற்கு மேல் மகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, தேவிகா வேலைக்குச் சென்றபோது சிறுமி மட்டும் தனியாக வீட்டிலிருந்த நேரங்களில் அவளை பிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

 

சிறுமி ஒத்துழைக்க மறுத்த போதெல்லாம் அவளை நெருப்பால் சூடு வைத்தும், அடித்து உதைத்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். தாயின் ஆண் நண்பரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன் தாயிடம் சொல்லி அழுது புலம்பி இருக்கிறாள் வைஷாலி. அதற்கு அவரோ, பெற்ற மகள் என்றும் பாராமல், பிரகாஷ் ஆசைப்படுவதுபோல் நடந்து கொள் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, மீண்டும் முரண்டு பிடித்திருக்கிறார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாயாரும், அவருடைய ஆண் நண்பரும் சிறுமியை மீண்டும் அடித்து கொடுமைப் படுத்தியதோடு, அவளுக்கு சில நாள்கள் உணவு கொடுக்காமல் பட்டினியும் போட்டுள்ளனர். காவல்துறை விசாரணையிலும் இந்த விவரங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாகவும் பிரகாஷ் மற்றும் தேவிகா ஆகிய இருவரையும் திருச்செங்கோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார். 

 

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரகாஷை சேலம் மத்தியச் சிறையிலும், சிறுமியின் தாயாரைச் சேலம் பெண்கள் கிளிச்சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.