
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தம்மப் பதிபகுதியில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு மணிகண்டன் மற்றும் சரோஜினியின் இரண்டரை வயது சிறுமி நிவ்யாஸ்ரீ சடலமாகக் கிடந்தாள். அவள் சடலமானது எப்படி? எனத் தெரியாமல் சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப் பதியப்பட்டது.
இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர், தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து வால்பாறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சின்னகாமன் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சரோஜினி ஆனைமலை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்திடம் சரணடைந்தார். “என் மகள் நிவ்யாஸ்ரீயின் கழுத்தை நெறித்து, நான்தான் கொலை செய்தேன்” என வாக்கு மூலம் அளித்தார். கிராம நிர்வாக அலுவலர், ஆனைமலை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
பின்னர் போலீசார் சரோஜினியிடம் விசாரணை செய்தனர். அவ்விசாரணையில், “எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதனால் எனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகர் பகுதி வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்கே தான் கூலி வேலைக்குச் செல்லும் சர்க்கார்பதியைச் சேர்ந்த பொம்மன் என்கிற சின்ன பொம்மனிடம் காதல் கொண்டேன். கடந்த சில மாதங்களாக தனிமையில் நாங்கள் இருந்தோம். ஆனால், ‘நமது உறவுக்குச் சிறுமி இடைஞ்சலாக இருக்கிறாள். ஆதலால், 'நிவ்யாஸ்ரீயை கொலை செய்து விடு’ என்று பொம்மன் என்னிடம் கூறினான். அதன்படி எனது கணவர் மணிகண்டன் வேலைக்குச் சென்றபிறகு நிவ்யாஸ்ரீயை கடந்த 14ம் தேதி கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்” என சரோஜினி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பொம்மனை சேத்துமடை பஸ் நிறுத்தத்தில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர். சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.