
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வாணக்கார தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் பாஸ்கரன், வயது 36. இவர், சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். கடந்த, இரண்டு ஆண்டுகளாக ஊரில் உள்ள இவர், திருமணமாகாத நிலையில், தினசரி சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்துவந்துள்ளார். மேலும், தெருவில் வசிப்பவர்களிடமும் குடிபோதையில் தினசரி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த 9ஆம் தேதி இரவு, பாஸ்கரன் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் ஆகியோர் பாஸ்கரனை இரும்புக் கம்பியால் கட்டிப் போட்டு கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில், பாஸ்கரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி.சுந்தரம், இன்ஸ்பெக்டர் வினிதா மற்றும் போலீசார் விரைந்துசென்று கொலையான பாஸ்கரன் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் பாஸ்கரன் கொலைக்கு காரணமான அவரது தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் இருவரையும் கைது செய்தனர். குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்த மகனை தாய் மற்றும் தம்பி ஆகியோர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.