பொட்டலத்திலிருந்ததை பகிர்ந்து சாப்பிட்ட குழந்தைகள்...அரசு மருத்துவமனையில் குவிந்த 500க்கும் மேற்பட்டவர்கள்!

More than 500 people gathered at the government hospital

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகிலுள்ளது நல்லாத்தூர் கிராமம். இங்குள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கயல், ராசுகுட்டி, சிவமணி, இளமதி, காயத்திரி உட்பட ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண்குழந்தைகள். இவர்கள் 8 பேரும்கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தெருவோரம் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் விஷ மருந்து பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது (பொட்டாசியம் மாங்கனெட் ). அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.

அது வெள்ளை நிறத்தில் இருந்ததால் இனிப்பான தின்பண்டம் அதை யாரோ தவறி வழியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று எண்ணி மேற்படி எட்டு குழந்தைகளும் அந்தப் பொட்டத்திலிருந்ததை ஆளுக்கு கொஞ்சமாக பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர். அதைத் தின்ற சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரது வயிறும் எரிச்சல் கண்டு கதறி அழுதுள்ளனர். இந்தத் தகவல் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் குழந்தைகள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். குழந்தைகளுக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் மற்றும் குழந்தைகளின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து கச்சராபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் கிடந்த விஷ மருந்து பொட்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் கிடந்த பொட்டலத்தை தின்பண்டம் என்று எடுத்து குழந்தைகள் சாப்பிட்டதால் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

children kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe