Skip to main content

ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 50க்கும் மேற்பட்ட பயணிகள்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

More than 50 passengers survived by driver's ingenuity

 

கும்பகோணத்திலிருந்து அரியலூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் திறமையால் பெரிய அளவில் ஏற்படவிருந்த உயிர் சேதம் தடுக்கப்பட்டிருப்பதாக பேருந்தில் பயணித்தவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள், விளைநிலங்கள், சாலைகள் என பரவலாக வெள்ள நீர் சூழ்ந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

 

இந்த நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூருக்குச் சென்றிருக்கிறது. சோழபுரத்தைத் தாண்டி பேருந்து வழக்கம்போல் வேகமாக வந்துகொண்டிருந்தது. திருப்பனந்தாளுக்கும் சோழபுரத்திற்கும் இடையே உள்ள திருவாய்பாடியில் பயணிகள் பேருந்துக்காக நிற்பதைக் கவனித்த ஓட்டுநர் பிரேக்கில் கால்வைத்திருக்கிறார். அப்போது பேருந்தின் பிரேக் பிடிக்காததைக் கண்டு நிலைகுலைந்தவர், மிக சாதூர்யமாக பெரிய விபத்து ஏற்படாமல் சாலையின் ஓரத்தில் இருந்த வயலுக்குள் இறக்கி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

 

More than 50 passengers survived by driver's ingenuity

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்தவழியாக சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வயலில் சாய்ந்து நின்ற பேருந்தைப் பார்த்து, பதறித்துடித்து, அங்கிருந்தபடியே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததோடு, காயமடைந்த பயணிகளை உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கவும் செய்தார். இதுகுறித்து பேருந்தில் பயனித்த பயணி ஒருவர், “கும்பகோணம் முதல் விக்கிரவாண்டி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. அதனால் சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு தொடர்ந்து மழைபெய்ததால் மோசமான நிலைக்கு மாறியிருக்கிறது.

 

தனியார் பேருந்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட டைமிங்கிற்காக வழக்கமான வேகத்திலேயே செல்கின்றன. அப்படித்தான் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வேகமாகவே வந்துகொண்டிருந்தது. திருவாய்பாடி வரும்போது பயணிகள் நிற்பதை அறிந்து பிரேக் போடுவதற்கு முயன்றார். ஆனால் தொடர் மழையால் பிரேக் பிடிக்கல, இதனை அறிந்த நாங்கள் கூச்சலிட்டோம், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதினாலோ அல்லது எதிரே வரும் பேருந்தில் மோதினாலோ பெரிய ஆபத்தாகிவிடும் என கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்து வயலுக்குள் இறக்கி 50 பேர் உயிரைக் காப்பாற்றினார்” என அதிர்ச்சி விலகாமல் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது.