Skip to main content

மாவீரன் பொல்லானிற்கு நினைவுச்சின்னம்: பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் மனு 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள்  வந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக  கலெக்டர் கதிரவனிடம் கொடுத்தார்கள்.
 

monument for bollaan


அப்படி வந்த ஒரு குழுவினரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது. பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு தலைமையில் வந்தவர்கள் தான் அவர்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் தாரை, தப்பட்டை வைத்து பலமாக அடித்தவாறு வந்தனர்.

அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 'உள்ளே தாரை தப்பட்டை உடன் செல்ல அனுமதி கிடையாது வேண்டுமென்றால் மனு மட்டும் கொடுங்கள்' என்றனர்.

இதனை தொடர்ந்து  பொல்லான்  மீட்புக் குழுவினர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பிறகு அந்த நிர்வாகிகள் கூறும்போது, "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த தீரன் சின்னமலையின் போர் படை தளபதியாக  மாவீரன் பொல்லான் இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலப் படை பொல்லானை கைது செய்து பிறகு சுட்டு கொன்றது. அப்படிப்பட்ட போர் வீரன் பொல்லான் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள  நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி பல முறை நாங்கள் மனு கொடுத்துள்ளோம். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 

monument for bollaan


பல போராட்டங்களுக்குப் பிறகு சென்ற 17.7.2019 ஆம் தேதி பொல்லான் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. எனவே நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட அரசு நில ஒதுக்கீடு செய்ய வேண்டும் . நாங்கள் சொந்த செலவில் நினைவு சின்னம் கட்ட தயாராக இருக்கிறோம்.

மாவீரன் தீரன் சின்னமலை மற்றும்  அவரது படை தளபதியாக இருந்த பொல்லான் ஆகியோரின் சமூக வேற்றுமையை கருத்தில் கொண்டு அரசு செயல்படக்கூடாது. அதற்காக இந்த அரசின் செவிட்டு காதுகளில் எங்கள் கோரிக்கை பறை முழக்கமாக விழ வேண்டும் என்பதற்காகத்தான் தாரை தப்பட்டை அடித்து வந்தோம் " என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.