The monkey that attacked the 4 year old child

கோவை ஹோப்ஸ் - விளாங்குறிச்சி சாலையில் கௌதமபுர நகரில் வசித்துவருகிறார் ஆட்டோ ஓட்டுநர் ராஜீவ் காந்தி. இவரது 4 வயது மகள் கடந்த 30ஆம் தேதி வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கழிவறையைப் பயன்படுத்த வந்தபோது வீட்டிற்குள் வந்த குரங்கு ஒன்று குழந்தையைத் தாக்கியுள்ளது. இதைக் கண்ட, குழந்தையின் தாய் சத்தம் போட்டார். அருகிலிருப்பவர்கள் வந்துகுரங்கை விரட்டி அடித்துவிட்டு குழந்தையைப் பார்த்தபோது, குழந்தைக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, குழந்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதல் உதவி அளிக்கப்பட்டது. ஆனால், குரங்கு கடி அல்லது தாக்குதலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் மருந்து உள்ளது. அதனால்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு குரங்கு கடிக்கு கொடுக்ககூடிய ஊசி போடப்பட்டு, தொடர் சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள குழந்தை நல்ல முறையில் இருக்கிறது.

ஓரிரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு சாய்பாபா காலனி பகுதியில் வீட்டிற்குள் குரங்கு நுழைந்ததையடுத்து வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநகரத்தின் முக்கியப் பகுதியில் குடியிருப்பில் குரங்கு நுழைந்து குழந்தையைத் தாக்கியுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வனத்துறை விசாரித்துக்கொண்டிருக்கிறது.

Advertisment