மதுரை மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் கே.கே.நகர் கோ.புதூர் பகுதிகளில் இரவில் வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு அதிகம் நடைபெற்று வந்தது. இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுபடி காவல் துணை ஆணையர் செந்தில்குமார் (குற்றம்) நேரடி மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் அண்ணாநகர் குற்ற சரகம் வேணுகோபால் தலைமையில், அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் M.சங்கர்கண்ணன் கீழ் சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், தலைமைக்காவலர் போஸ், முதல்நிலைக்காவலர் வெங்கட்ராமன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பழங்குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிகுடியிருப்பை சேர்ந்த ரெங்கசாமி மகன் பெரியசாமி என்பவன் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
திருச்செந்தூர் தூத்துக்குடி மற்றும் பல இடங்களில் எதிரியை தேடி வந்த நிலையில் 12.09.19 ந் தேதி மதுரை மேலமடை பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதணை செய்த போது காரில் வந்த மேற்படி எதிரியையும் அவருடன் வந்த மதுரை அண்ணாநகர் ரவீந்திரன் என்பவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் அண்ணாநகர் மற்றும் புதூர் காவல்நிலையபகுதிகளில் மொத்தம் 33 கன்னக்களவு குற்றங்கள் செய்துள்ளதை ஒப்புக்கொண்டனர்.
இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 132 சவரன் தங்க நகைகள் மற்றும் இக்குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்குகளை துப்பு துலக்கி எதிரிகளைக் கைதுசெயததில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெகுவாக பாராட்டினார்.