Skip to main content

ஏமாற்றிய நண்பர்கள்... கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி... மளிகை வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு  தற்கொலை

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

MONEY FRIENDS HUSBAND AND WIFE INCIDENT POLICE INVESTIGATION

 

கிருஷ்ணகிரி அருகே, ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை கறந்து சென்ற நண்பர்கள் ஏமாற்றியதாலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாலும் மளிகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி விஐபி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 44). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  

 

பள்ளியில் காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் மகள்கள் இருவரையும் ஜெயலட்சுமியின் சொந்த ஊரான கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில், திங்கள்கிழமை (அக். 10) காலை மளிகை கடையில் வேலை செய்யும் சீனிவாசன், மஞ்சுநாத் ஆகியோர் கடையின் சாவியை வாங்குவதற்காக சிவகுமாரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உள்பக்கம் தாழ் போடாமல் லேசாக மூடப்பட்டு இருந்தது.  

 

நீண்ட நேரமாக கதவைத் தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து யாரும் வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிவகுமாரும், ஜெயலட்சுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  

 

இதுகுறித்து அவர்கள் சூளகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதையடுத்து காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.  

 

சடலம் கிடந்த அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்து சிவகுமார் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், ''பிஸினஸ் செய்வதற்காக நான் கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன்.

 

அதனால் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  

 

தொடர் விசாரணையில், சிவகுமாரிடம் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசை வலை விரித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு நெருக்கமான சிலர் அவரிடம் இருந்து நிலம் வாங்குவதற்காக சிறிது சிறிதாக பணம் வாங்கிச் சென்றுள்ளனர். 

 

இதற்காக சிவகுமாரும் பலரிடம் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். நிலத்தில் முதலீடு செய்வதாக பணம் வாங்கிச் சென்றவர்கள் நிலத்தை வாங்கிக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கிடையே சிவகுமாருக்கு கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.  

 

இதனால் மன உளைச்சல் அடைந்த சிவகுமார், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.