விழுப்புரம் நகரை ஒட்டி இருக்கும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் 85 வயது தையல்நாயகி. இவர் தனியாக ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்துவருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் இவர் வீட்டில் தனித்திருந்தபோது அறிமுகமில்லாத மர்ம மனிதர்கள் இருவர் தையல்நாயகியிடம் வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர்.
அவர் தண்ணீர் எடுத்து வருவதற்கு வீட்டுக்குள் சென்றுபோது அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் மயக்க மருந்து கலந்த துணியால் மூதாட்டி தையல்நாயகி முகத்தில் வைத்து அழுத்தி உள்ளனர். இதில் மயக்கமடைந்த மூதாட்டி கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க செயினையும் அவர் சுருக்குப் பையில் சேமித்து வைத்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தையும் திருடிக்கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த தையல்நாயகி, பணமும் தன் கழுத்தில் கிடந்த செயினையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து சத்தம் போட்டு கத்தி கதறி அழுதுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து, அவர்களின் ஆலோசனையின்பேரில் தையல்நாயகி விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்துசென்ற போலீசார் சம்பவம் குறிப்பு தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தையல்நாயகியிடம் திருடிச் சென்ற அந்த மர்ம கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவதாக தையல்நாயகியிடம் போலீசார் உறுதி அளித்துள்ளனர். வறுமையில் வாடும் இவரையும் விட்டுவைக்கவில்லை அந்த ஈவிரக்கமற்ற கொள்ளையர்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.