Skip to main content

“ராமஜெயம் வழக்கில் அவர்கள் சொல்வது வேறு, அறிக்கையில் இருப்பது வேறு” - வழக்கறிஞர் பேட்டி

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

mohan advocate talk about ramajayam case

 

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று நடைப்பயிற்சி சென்ற போது மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதில் வழக்கு சம்பந்தமாக எந்த துப்பும் கிடைக்காத காரணத்தினால் வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஆனால், சி.பி.ஐ விசாரணையிலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, சிறையில் உள்ள முக்கியக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்கு வெளியில் உள்ளவர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்திலிருந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, பிரபல ரவுடிகளான நரைமுடி கணேசன், மோகன்ராம் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகீல் அக்தர், ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

 

அந்தப் பட்டியலில் இருக்கும் 12 பிரபல ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த 12 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு “உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்றால், மாவட்ட எஸ்.பி.யால் தான் அனுமதி கோர முடியும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டி.எஸ்.பி. தான் மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எஸ்.பி. மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்து இந்த வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

அதன் பிறகு,  ரவுடி மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராமஜெயத்திற்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ. விசாரணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ராமஜெயம் கொலை வழக்கில்  அமைச்சர் கே.என்.நேரு  குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இந்த 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர்” என்று தெரிவித்தார். 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் ராமஜெயம் கொலை வழக்கு தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.