Modi's threats are not valid Minister Anbil Mahesh 

திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு கலைஞரின் சிலையைத்திறந்து வைத்தார்.

முன்னதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. அதனால் தான் பிரதமர் மோடி இப்போதுதமிழகத்திற்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருக்கிறார். புயல், வெள்ளம் தாக்கியபோது, மீனவர்கள் இறந்தபோது, நீட் தேர்வால் 22 மாணவ - மாணவிகள் இறந்தபோது வராத மோடி ஏன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் வராத மோடி இப்படி எதற்கும் வராத மோடி. இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்துவிட்டது என்று அர்த்தம். அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் முதல்வர் எழுதிய கடிதத்தில் ஆளும் கட்சியாக இருந்தபோது ஏதும் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போதாவது ஏதாவது செய்வீர்களாக என்று நாகரீகமாக கேட்டிருந்தார். மோடி மிரட்டினால் அடிபணிய இது அ.தி.மு.க. அல்ல. அண்ணாவின் தி.மு.க.,அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது” என்று கூறினார்.

கலைஞரின் சிலையைத்திறந்து வைத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பேசியதாவது, “இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. காஷ்மீர், டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு இப்படி இந்தியா கூட்டணி அமைந்துவிட்டது. தமிழ்நாடு தான் இதற்கு வழி காட்டுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரப்போகிறது” என்று கூறினார்.

Advertisment

இந்நிகழ்வில் திருச்சி மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தி.மு.க பொருளாளர் குணசேகரன், மணப்பாறை நகர கழகச் செயலாளர் மு.மா. செல்வம், மணப்பாறை நகர மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், மணப்பாறை ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவல்லி ராமசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.