Modi's arrival! Ban to Annamalai?

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத்தொடக்கி வைப்பதற்காக இன்று மதியம் 2.45-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. அவருக்கு பிரமாண்டமான வரவேற்பைக் கொடுக்கிறது தமிழக பாஜக. சென்னை வரும் மோடியை முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். சென்னை நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று இரவே கிளம்புகிறார் மோடி.

Advertisment

மோடியின் இந்த சென்னை வருகையின் போது, விமான நிலையத்தில்தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை மோடியை வரவேற்கிறார் என்றும், சென்னையிலிருந்து மோடியை வழியனுப்பி வைக்கும் போது மோடியிடம் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை இன்று மதியம் வரை சென்னை திரும்பவில்லை. மோடியை வரவேற்கும் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை என்கிறார்கள். ஒருவேளை, ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மோடி வரும்போது அவரது ஃப்ளைட்டிலேயே அண்ணாமலையும் வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், மதியம் 2 மணி வரை மோடியுடன் பயணிப்பவர்களின் லிஸ்டில் அண்ணாமலை பெயர் இல்லை.

Advertisment

கர்நாடக தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியிலேயே அண்ணாமலையை கட்சியின் தேசியத்தலைமை இருக்க வைத்திருக்கிறது என்று தற்போது தகவல் வருகிறது.

அதேசமயம், "அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாஜகவின் தேசிய தலைமைக்குத்தான் இருக்கிறது. அதனால் கூட்டணி பற்றி வாய் திறக்க வேண்டாம் என அண்ணாமலைக்கு தலைமை உத்தரவிட்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முரண்பட்ட கருத்துக்களை அவர் தொடர்ந்து சொல்லி வருவதால் அவரை டெல்லிக்கு அழைத்து கடுமையாக கண்டித்திருக்கிறார் அமித்ஷா. மேலும், மோடியை வரவேற்கப் போக வேண்டாம் என்றும் தடை போட்டுள்ளார். அதனால்தான் மோடியின் வருகையில் அவர் இல்லை" என்கிறார்கள்.