Skip to main content

''மோடி அரசு நாட்டை விலைபேசி விற்று வருகிறது"-மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

 '' Modi government is selling the country at a bargain price '' - Interview with Marxist Secretary K. Balakrishnan!

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று கடலூரில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

"மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அப்போது அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் விவசாயிகளுக்கு எதிராக, துரோகம் விளைவித்துள்ளார்கள். 10 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதம் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.

 

சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்களை சட்ட விரோத குடியேறிகள் என்ற பட்டியலிலே வைத்துள்ளோம். அவர்களை அகதிகள் என்ற பட்டியலில் கூட வைக்க முடியவில்லை. இதற்கு, சர்வதேச அளவில் அகதிகளுக்கான பிரகடனத்தில் மத்திய அரசு கையெழுத்து போடவில்லை. இந்திய அளவிலான சட்டத்தை நிறைவேற்ற குழு அமைத்தும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போரை வாராவாரம் கையெழுத்து இடுதல் போன்று தீவிரவாதிகளை கண்காணிப்பது போன்று நெருக்கடி அளிக்கப்படுகிறது. எனவே, அவர்களை அகதிகள் என்று அறிவிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

 

இரண்டாம் அலை கரோனாவை கட்டுப்படுத்தியது, மருத்துவ கட்டமைப்புகளை பாதுகாத்து வைத்திருப்பது, 3 ஆவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது, ரூ. 4 ஆயிரம் நிவாரணம், மளிகை தொகுப்பு வழங்கியது போன்ற தமிழக அரசின் 100 நாள் சாதனையை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் பாராட்டுகிறது.

 

வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல கடந்த அரசின் தவறான கொள்கையால் நிதி நெருக்கடி இருப்பது உண்மை தான். அதனை காரணம் காட்டி மக்கள் மீது அந்த நிதி சுமையை ஏற்றக் கூடாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு வழங்காதது அவர்கள் தலையில் சுமையை ஏற்றும். கொடுக்கும் வருமானத்தை குறைத்தால் வாங்கும் சக்தி குறையும். எனவே, அரசு இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

புதிதாக மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்கும் போது அதில் உள்ள கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்த முடியாது. எனவே, குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் அமலில் இருக்கும் வரையில் இத்திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.100 கோடி போதுமானது இல்லை. 53 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கிறார்கள். குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசின் திட்டத்தில் கடந்த தமிழக அரசு இணைத்து விட்டது. இதனால், வீடு பெறுவோர் மத்திய அரசுக்கு ரூ.1.50 லட்சம் கட்ட வேண்டி உள்ளது. இதனால், கலைஞரால் கொண்டு வரப்பட்ட குடிசை மாற்று வாரியம் பயனற்றதாக மாறி வருகிறது. எனவே, இலவசமாக வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டையே விலை பேசி விற்று வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது மக்கள் மீது தான் மீண்டும் சுமையை ஏற்றும். எனவே, கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 5 முதல் 15 ஆம் தேதி வரையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குவது, 20 முதல் 30 ஆம் தேதி வரையில் அகில இந்திய அளவில் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து மிகப்பெரிய இயக்கம் நடத்த உள்ளோம். மோடி அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என்ற நிகழ்ச்சியை சுமார் 2000 இடங்களில் நடத்த உள்ளோம். 2024 தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன" என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் கோ.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.