Skip to main content

மகளிர் மட்டுமே இயக்கும் நடமாடும் டீ கடை! அசந்துபோன ஐஸ்வர்யா ராஜேஷும், நாசரும்! (படங்கள்)

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய, முழுவதும் பெண்களால் மட்டுமே இயக்கப்படுகிற ஆட்டோவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டீ கடையின் துவக்க விழாவில்  நடிகர் நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வருமான வரி கூடுதல் ஆணையர் நந்தகுமார் ஐஆர்எஸ், விஜிபி தலைவர் விஜிபி சந்தோசம், ஸ்பெயின் கவுன்சில் ஜெனரல் டோனி லோபோ, இயக்குநர் எஸ்.எம்.வசந்த், பர்வீன் டிராவல்ஸ் இயக்குநர் சாதிக்  மற்றும் எம் ஆட்டோ தலைவர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

விழாவில் பேசிய நிர்வாக இயக்குனர் முகமது ரஹ்மத்துல்லா “தமிழ்நாட்டில் தேயிலை நுகர்வு என்பது மிகப்பெரியது. டீ கடை இல்லாமல் ஒரு தெருவைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான இந்த சூழலில் ஒரு நிலையான டீ கடையை வைத்திருப்பதை விடவும் இது சிறந்தது. பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஐ.டி பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பகுதிகளில் எளிய முறையில் விற்பனை செய்ய இந்த நடமாடும் டீ கடைகள் உதவுகின்றன” என்று கூறினார். தொடர்ந்து பேசிய கில்லி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வில்லியம் ஜெயசிங், கில்லி சாய் ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற 50 ரெட்ரோ ஃபிட் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதோடு இந்த அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தனது கிளைகளைத் துவங்கி  2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் கில்லி சாய் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். இது தவிர, டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் மற்றும் பெரம்பூரில் ஒரே நாளில் மற்ற மூன்று மோட்டார் கில்லி சாய் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், தங்கள் கடைகள் அனைத்திலும் பாலின பாகுபாடு இன்றியும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார். 
 

விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பெண்கள் மட்டும் இயக்ககூடிய இந்த டீ கடை போன்ற புது முயற்சிகள் பெண்களுக்கான சுயமுன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்காக சமூக அங்கிகாரத்தையும் வழங்குவதாக வாழ்த்து தெரிவித்தனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்க கொதிக்க பால் அபிஷேகம்; அதிகாரிகளை அலறவிட்ட பெண்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Employees who went to remove the platform store; The woman who anointed milk to boil

 

கேரளாவில் நடைமேடையில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ற போது பெண் ஒருவர் அதிகாரிகள் மீது கொதிக்கக் கொதிக்க பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் செங்கனூர் என்ற பகுதியில் உள்ள சிறிய நகரில் வெல்லவூர் ஜங்சன் எனும் பகுதியில் நடைமேடை பகுதியில் பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அந்த டீக்கடையால் பொதுமக்கள் நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் அந்த கடைக்கு வந்தனர். கடையில் இருந்த பொருட்களை எடுத்து அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஆவேசமாக கத்தினார். கடையில் இருந்த மற்றொரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னரே சொல்லியிருந்தால் நாங்களே காலி செய்திருப்போம் என தெரிவித்தனர். முன்பே  நோட்டீஸ் அனுப்பியிருந்தால் நாங்களே கடையை காலி செய்திருப்போம் என கதறினர்.

 

இதனால் அந்த சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் கடையை காலி செய்வதிலேயே குறியாக பொருட்களை எடுக்க முயன்றனர். இதுவரை அழுது கதறிய பெண்கள் ஒருகட்டத்தில் ஆத்திரமடையத் தொடங்கினர். அவர்களது ஆத்திரத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை ஊழியர்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக கடையில் டீக்காக கொதித்துக் கொண்டிருந்த பாலை சடார் என அந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் குழுவின் மீது வீசினர். இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேலும் கடையில் வடைக்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து ஊற்ற முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Next Story

ஆவின் அதிகாரிகளின் உத்தரவு; கேள்விக்குறியாகும் எளியோரின் வாழ்வாதாரம்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Stop selling local milk to tea shops

 

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் பாலாகவும், பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைக்கு வருகிறது. அதனால் ஆவினுக்கு அதிக அளவு பால் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டும் உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள 90% பாலை கூட்டுறவு சங்கங்கள் ஒப்பந்தப்படி ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று பால் வளத்துறை அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

இந்த நிலையில், பால்வளத்துறை சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 70% செய்து வந்த உள்ளூர் விற்பனையை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள், டீ கடைக்காரர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதுநிலை ஆய்வாளர் திருப்பதி மற்றும் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் பால் விற்பனை செய்ய முடிவான பிறகு, உள்ளூர் விற்பனை தொடங்கியதுடன், ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதுகுறித்து அமைச்சர் நாசர் நம்மிடம், “கூட்டுறவு சங்க முறைகேடுகளைத் தடுக்கவும், பிற ஊர்களுக்கு தேவையான பால் அனுப்பவுமே 10% உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப சொல்கிறோம்” என்றார். இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பால்வளத்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி உள்ளூர் விற்பனை 10% மட்டுமே பால் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 44% சதவீதம் உள்ளூர் விற்பனை செய்யப்படுவதால் ஆவினுக்கான பால் குறைகிறது. ஆகவே, கீரமங்கலம் பகுதியில் டீ கடைகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பால் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் கணேசன் மற்றும் பணியாளர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். டீ கடைகளுக்கு பசும்பால் விற்பனை நிறுத்தியுள்ளதால் செவ்வாய் கிழமை கீரமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டதுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆவினுக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.

 

தகவலறிந்து வந்த கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு, ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலனிடம் பேசினார். டீ கடைகளுக்கு பால் விற்பனையை நிறுத்த வேண்டாம் என்றும், தற்போது உற்பத்தி குறைவாக இருந்தாலும் விரைவில் உற்பத்தி அதிகரிக்கச் செய்து ஆவினுக்குத் தேவையான பாலை அனுப்புவதாகவும் கூறிய பிறகு டீ கடைகளுக்கு பால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறைபிடிக்கப்பட்ட பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இது குறித்து ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன் நம்மிடம் பேசுகையில், “கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடக்காமல் வரைமுறைப்படுத்தவும், ஆவின் மூலம் தரமான பால் வழங்கவும்தான் உள்ளூர் விற்பனையை நிறுத்தக் கூறியுள்ளோம். வீடுகளுக்குத் தேவையான பால் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கு வழங்கும் பால் தரம் ஆய்வு செய்து வழங்க வேண்டியுள்ளது. அதனால்தான் ஆவினுக்கு ஏற்றி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு அனுப்புவதாகத்தான் ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.