Skip to main content

ஃபோனில் கேம் விளையாடக்கூடாது என தாய் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Mobile game incident in nellai

 

மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் அடிமையாகாமல் இருக்கப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 25 ஆம் தேதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்தநிலையில் ஆன்லைன் கேம் விளையாடியதைத் தாய் கண்டித்ததற்காக மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மைக்காலமாக மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளில் சிறார்கள் மூழ்கி, அதனால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 25 ஆம் தேதி சுற்றறிக்கை  வெளியிட்டது.

 

அதில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் அசாதாரணமாக நடந்துகொள்கிறார்களா? பெரும்பாலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களா? என்பதைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும். வீட்டில் பொது இடத்தில் கணினி மற்றும் மொபைல் ஃபோன்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், கணினி மற்றும் செல்ஃபோனில் விளையாட்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்டிப்பாக இவற்றைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆன்லைனில் விளையாடும் குழந்தைகளின் போக்கும் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்கு குழந்தைகள் அடிமையானால் கல்வி மற்றும் சமூக வழக்கை மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

 

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஃபோனில் ஃபிரீ ஃபயர் கேம் விளையாடக்கூடாது என தாய் திட்டியதின் காரணமாக பாலிடெக்னிக் மாணவர் சஞ்சய் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.