Skip to main content

'எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டும்'- கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

'MLAs need cars' - Nayyar Nagendran demands!

 

2022-23ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''பேரவைத் தலைவர் அவர்களே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முதல்வர் கொடுத்த அறிவிப்பை உண்மையில் மனதார வரவேற்கிறேன். அதேநேரம் முதல்வரின் பார்வை இப்பொழுதுதான் ஊராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து சேர்மன், ஊராட்சி மன்ற பெருந்தலைவர் வரை வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் வரை அந்த பார்வை வரவில்லை என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆகவே எனக்குக்கூட வேண்டாம் தேவைப்படுகின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் அது மிகவும் நன்றாக இருக்கும் சிந்தித்து பார்க்கலாம். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பிலோ அல்லது முடிந்த அளவு வட்டியில்லாக் கடன் மூலமாவது கார் வழங்க வேண்டும் என்று இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

அப்பொழுது பேசிய சபாநாயகர் அப்பாவு, ''மத்திய அரசிடம் நீங்க கொஞ்சம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்துருங்க'' எனக் கூற அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; நயினார் நாகேந்திரன் உறவினர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. அதே வேளையில், அந்த பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் பாஜகவினர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், நயினார் நாகேந்திரன், 'எனக்கும் அதற்கு சம்பந்தமில்லை' என கூறி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் போலீசார், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதிலும், எஃப் ஐ ஆர்-ல் சொல்லப்பட்ட பல முக்கிய தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் பாலாமணி என்பவர் தேர்தல் பறக்கும் படையில் உள்ளார். அவரது டீம்மில் காவலர்கள் பிரபாகரன், குணசீலன், வீடியோ கிராபர் மோகன்ராஜ், டிரைவர் டில்லிபாபு ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று செந்தில் பாலாமணி தேர்தல் பறக்கும் படை டீம் தாம்பரம் செக்போஸ்ட் அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்தில் பாலாமணியை போனில் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏ கோச் படுக்கை எண்கள் 26,27,28 ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பணம் கொண்டுச் செல்வதாக தகவல் அளித்துள்ளார். தகவலின் படி, செந்தில் டீம்  தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்துள்ளனர்.

தகவலின் படி ரயிலில் பயணம் செய்த சதீஷ், பெருமாள், நவீன் என்ற மூவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அதிக அளவு பணம் இருந்தது தெரிய வந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால்  தேர்தல் பறக்கும் படை கையும் களவுமாக அவர்களை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். அதில், 3,98,91,500  ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து சிக்கிய சதீஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை, திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தன்னிடம் கொடுத்து அனுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெருமாள் என்பவரிடம் விசாரணை செய்ததில் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பணம் அனைத்தையும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுத்ததாக சதீஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பிஜேபியில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ-வின் அடையாள அட்டையும் தேர்தல் பறக்கும் படையின கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, சிக்கியவர் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு 22ஆம் தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு.. இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

இத்தகைய சூழலில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால்  சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு  பெருமாள் என்பவரை அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் குறிப்பிட்டுள்ள பெருமாள் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.