Skip to main content

‘பஸ் இல்லன்னா என்ன கார்ல போவோம்...’ - மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எம்.எல்.ஏ

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

MLA who took the students in his car

 

சரியான நேரத்திற்கு பஸ் வரவில்லை எனப் புகாரளிக்க வந்த மாணவிகளைத் தனது சொந்த காரில் ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டில் இறக்கிவிட்ட சிபிஎம் எம்.எல்.ஏவின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மாணவிகள் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த வழியே செல்லும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படாது எனக் கூறப்படுகிறது. இதனால், கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்லாமல், கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். 

 

இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியன்று தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டைக்கு வரும் தடம் எண் 60 அரசுப் பேருந்து, நீண்ட நேரம் ஆகியும் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வராமல் இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவிகள், நேராக கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரையின் அலுவலகத்திற்கு நடையைக் கட்டினர். 

 

திடீரென அலுவலகத்திற்குள் வந்த மாணவிகளிடம், சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை என்ன பிரச்சனை என  விசாரித்துள்ளார். அப்போது, எம்எல்ஏவிடம் மாணவிகள் பேசும்போது, “எங்கள் பகுதிக்கு வரும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. அதனால், நாங்கள் நேரத் தாமதமாக பள்ளிக்குச் செல்கிறோம். மாலையிலும் தாமதமாகத்தான் வீட்டிற்குச் செல்கிறோம். இந்தப் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்தனர். 

 

இதைக்கேட்ட எம்எல்ஏ சின்னதுரை, உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு, இனிமேல் சரியான நேரத்திற்குப் பேருந்துகள் வரும் என மாணவிகளுக்கு உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் புகார் அளிக்க வந்த பள்ளி மாணவிகளை, எம்எல்ஏ சின்னதுரை அவருடைய சொந்த காரில் ஏற்றிக்கொண்டு மாணவிகளை அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.

 

இதுகுறித்து, சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரையிடம் நாம் செல்போனில் பேசியபோது, “இதுகுறித்து, மாணவிகள் ஏற்கனவே எங்களிடம் புகார் அளித்தனர். இந்தப் பிரச்சனையை நாங்கள் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார். புகார் அளிக்க வந்த அரசுப்பள்ளி மாணவிகளை, தன்னுடைய சொந்த காரில் ஏற்றிக்கொண்டு, அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்த எம்எல்ஏ சின்னதுரையின் செயலை பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.