Skip to main content

பஸ் மோதி பெண்கள் உயிரிழப்பு; ஆறுதல் கூட சொல்ல வராத எம்.எல்.ஏ

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

MLA Kadhar Basha Muthuramalingam did not even come condole with family women

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சதக் பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நேற்று விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த அம்மாவும் மகளும் (குப்பம்மாள், பார்வதி) பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவிரைவு பேருந்தும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை ஏற்றி வந்த மினி லாரியும் நேருக்கு நேராக கடுமையாக மோதியது. இதில் அதி விரைவு பேருந்து கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை உடைத்து உள்ளே உள்ள மரங்களை எல்லாம் உடைத்து தள்ளி நின்றது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த ஏழு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

இது பற்றி கீழக்கரை மீனவ சங்கத் தலைவர் முனியசாமி கூறியதாவது:- குப்பம்மாள் கணவர் கடந்த வருடம் விபத்தில் இறந்துவிட்டார் அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அதேபோல் கடந்த வருடம் பார்வதியம்மாள் அவர்களது மகனும் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களையும் இவர்களது குடும்பத்தினர் தான் வைத்து பராமரித்துள்ளனர்.

 

MLA Kadhar Basha Muthuramalingam did not even come condole with family women

 

இந்நிலையில் தாயும் மகளும் விபத்தில் இறந்துள்ள நிலையில், இந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அளிக்கவில்லை என்றால் முதல்வர் வரும்போது பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து உடனடியாக கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும் மீனவர் சங்கத்தினரைச் சேர்ந்தவர்கள் பேசியபோது தி.மு.க.வைச் சேர்ந்த மலைச்சாமி மற்றும் உதயகுமார் ஆகியோர், இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் இப்போதைக்கு பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

 

மேலும் முதல்வர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிறைய செலவு செய்துள்ளதாகவும் அவரிடம் போதுமான பணம் இல்லாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அதற்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள், எங்களுக்கு அவர் தரும் பணம் தேவையில்லை. ஆறுதல் கூட சொல்ல வரக்கூடாதா? எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றார்கள் கனத்த குரலில். மேலும் முதல்வர் வரும்போது தாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.