MLA inspection at the trichy bus stand

Advertisment

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அனைத்தும் சாலைகளை ஆக்கிரமித்து தற்காலிக கடைகளாக அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பயணிகள் நடப்பதற்கு போதுமான நடைபாதைகள் இல்லாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களையடுத்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இன்று சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல், பஸ்கள் முறையாக நிறுத்தி செல்வதில்லை மற்றும் சாலையோர கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளன உள்ளிட்டவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.

குறிப்பாக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், அலுவல் நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா, மாணவர்கள் முறையாக பயணம் செய்ய ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா?, பஸ்கள் அனைத்தும் ஒழுங்காக நிறுத்தப்படுகின்றனவா? என ஆய்வு செய்தார். மேலும் பயணிகளின் தேவைகளை அறிந்து அவற்றை உடனே நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisment

இதையடுத்து சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பழக் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பயணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்க வேண்டும். மேலும் கடைக்கு வருபவர்கள் தங்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.