Skip to main content

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணம் கொடு! எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
mla

  

 புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் புயல் பாதிப்பிற்காக அரசு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, இந்த கிராமத்தில் சுமார் 2300 குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் சுமார் 1100 பேருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதால் நிவாரணம் கிடைக்காத கிராம மக்கள் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. 

 

    இந்த நிலையில் சாலை மறியல் நடந்த இடத்திற்கு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் கீரமங்கலம், அறந்தாங்கி போலிசார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலிசார் வந்திருந்தனர். 

 

m

  

 போராட்டம் நடக்கும் தகவல் அறிந்து அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் அதை ஏற்காத மக்கள் பல முறை மனு கொடுத்துவிட்டோம். இனியும் செலவு செய்து மனு கொடுக்க முடியாது.  குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணப் பொருளும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையும் வழங்க வேண்டும். மேலும் இதுவரை நிவாரணம் கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் மற்றும் நிவாரணம் வழங்கப்பட உள்ளவர்களின் பட்டியலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்ட வேண்டும். அப்போது தான் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

 

m


    
அப்போது தாசில்தாரிடம் பேசிய எம்.எல்.ஏ மெய்யநாதன்.. அரசு நிவாரணத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. கூரை வீடு, ஓட்டு வீடு, மட்டுமின்றி காங்கிரீட் வீடுகளும், காலனி வீடுகளும் உடைந்துள்ளது. ஆனால் காங்கிரீட் வீடு, காலனி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அருகில் உள்ள ஆலங்குடி தாலுகாவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி தாலுகாவில் மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறினார். 

 

    அப்போது எழுந்த ஒருவர்.. என் காலனி வீடு கட்டி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலில் மேலும் சேதமடைந்துவிட்டது. கணக்கெடுக்க வந்த அதிகாரி வீட்டிற்குள் சென்றவர் படம் எடுக்காமல் வெளியே ஓடிவந்து அவருக்கு மேல் அதிகாரிக்கு போனில் பேசினார். அப்போது காலனி வீட்டில் கம்பிகள் மட்டும் தான் இருக்கிறது. உடைந்து கொட்டுகிறது. படம் எடுக்கவே பயமாக இருக்கிறது என்று பேசிவிட்டு நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார். ஆனால் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறினார். இதே போல பலரும் இடிந்த வீடுகளின் படங்களை காட்டினார்கள்.

 

m

  

 பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் அங்கு வந்திருந்த மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் சென்ற மெய்யநாதன் எம்.எல்.ஏ அனைத்து கிராமங்களிலும் குறைவான அளவே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதால் இப்படி மக்கள் போராட்டங்கள் நடக்கிறது என்றார்.

 

    மேற்பனைக்காடு கிராமத்தில் சாலை மறியல் நடக்க இருப்பதாக  தகவல் வெளியான நிலையில் மேற்பனைக்காடு செல்லும் ஒரு சில அரசு நகரப் பஸ்கள் கீரமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டது. அதனால் அந்த பஸ்சில் சென்ற பயணிகளும், மேலும் மேற்பனைக்காடு செல்ல கீரமங்கலத்தில் காத்திருந்த பொதுமக்களும் 5 கி.மீ. தூரம் வரை நடந்து சென்றனர். 
    அதே போல பெரியார் இணைப்புச்சாலையில் பெரியார் கிராம பெண்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதே போல கந்தர்வகோட்டை பகுதி என்று மாவட்டம் முழுவதும் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
            
 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.