Skip to main content

எப்போது கைது செய்ய வருகிறீர்கள்... கைது செய்தாலும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்தே தீரும்: மு.கஸ்டாலின் பேச்சு

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


 

mkstalin


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10-04-2018) காவிரி உரிமை மீட்புப் பயணத்தை கோட்டூர் பகுதியில் முடித்து வைத்தபோது ஆற்றிய உரை விவரம்: 
 

இந்த மண் நீதியை நிலைநாட்டிய மண் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது மகன் செய்த தவறுக்காக, அவனை தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நிறுத்திய மனுநீதி சோழன் தோன்றிய மண் இந்தத் திருவாரூர் மண் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட மண்ணில் பயணம் நடத்தி, இந்தப் போராட்டம் குறித்த விளக்கங்களை, நோக்கத்தை எடுத்துச் சொல்லும் நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பாக மன்னார்குடியில் பயணம் நடைபெற்றது. என்னைப் பொறுத்தவரையில் மன்னையை கோட்டூர் வென்றதா, கோட்டூரை மன்னை வென்றதா என ஒப்பிட்டுப் பார்த்து பேசுவதை விட, இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எடுபிடி ஆட்சியை அகற்ற ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 
 

காரணம், ஊழல்கள், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள், கொள்ளை என்று நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கிஞ்சிற்றும் சிந்தித்துப் பார்க்காத ஆட்சி நடப்பதுதான். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு, ஒவ்வொரு நாளும், இந்த ஆட்சி தொடருமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் நிச்சயமாக, உறுதியாக அடுத்த வினாடியே இந்த ஆட்சி அகலும் நிலை உருவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதாவது, முதலமைச்சர் எடப்பாடியின் திறமையை, ஆற்றலை வைத்து ஆட்சி தொடரவில்லை, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து இந்த ஆட்சி நடக்கிறது. ஆட்சி நடத்தத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களுடன் தொடர்கிறதா என்றால் இல்லை. சிறிய வித்தியாசத்தில் இந்த ஆட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது. 
 

எனவே தான், இங்கு இரா.முத்தரசன் பேசுகையில், “பிரதமர் மோடியையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நாங்கள் நம்பவில்லை, எதிர்க்கட்சித் தலைவரான உங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்”, என்று தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரையில், எங்களை யார் நம்புகிறீர்களோ, இல்லையோ, உங்களை நாங்கள் நம்பி இங்கு வந்திருக்கிறோம். அந்த நம்பிக்கை பெருகி வருவதால் தான், இத்தனை பெரிய கூட்டம் இங்கு கூடியிருக்கிறது. இது இங்கும், மன்னையிலும் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இதே நிலைதான் இருக்கிறது. நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு, காவிரிப் பிரச்சினைக்காக நடத்தும் எங்களுடைய பயணத்துக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். 
 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சரியோ, தவறோ மாநில உரிமைக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. இங்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. எனவே, இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் உறுதியோடு நான் சொல்ல விரும்புவது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வருகின்ற நேரத்தில், நிச்சயம் அப்படிப்பட்ட நிலை உருவாக்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிலை உருவானால், யாராலும் நம்மை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. நம்மிடையே உள்ள பிளவை, அரசியல்ரீதியான மோதலை எல்லாம், மத்தியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அதையெல்லாம் பயன்படுத்தி, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 

எனவே, இதனை போக்குவதற்காக, எதிர் கட்சிகளாக இருக்கின்ற 9 கட்சிகள் இணைந்து, தொடர்ந்து பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் உணர்வு கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதி உணர்ந்து கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. இருந்தாலும், கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கலாமா என்று கேட்டால், ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், வரும் 3 ஆம் தேதி வரை வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக மாநில தேர்தல் வரையில் காலம் கடத்த மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 

இந்தநிலையில், தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கின்ற, விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்ற பிரதமர் மோடி அவர்கள் வரும் 12 ஆம் தேதியன்று சென்னைக்கு வருகிறார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அவருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சிகளின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரின் நிகழ்ச்சிக்கு சென்று, அதேபோல திரும்பி வந்து தப்பிவிடலாம் என்று கருதி விடக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் அவருக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. 
 

பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டினால், அது மோடி அவர்களுக்கு பெரும் அவமானமாகி விடும். எனவே, இதை தடுத்து விட வேண்டும் என்பதற்காக நமது கட்சிகளின் தலைவர்களை எல்லாம் இன்றோ அல்லது நாளையோ கைது செய்துவிடும் வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு எல்லாம் செய்தி வந்திருக்கிறது. எங்களை எல்லாம் கைது செய்து விட்டால், எங்களுடைய தொண்டர்கள், தோழர்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுவார்களா? எனவே, கைதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒருவேளை கைது செய்தால், இந்தப் போராட்டத்துக்கு இன்னும் வலு சேரும். எனவே, எப்போது கைது செய்ய வருகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். 
 

சென்னையில் மறியல் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதும், மெரினாவில் 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு இருப்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் தெரிந்தும் நாங்கள் ஏற்கனவே சென்றோம் என்றால், வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிந்துதான், அதுபற்றிக் கவலைப்படாமல் நாங்கள் சென்றோம். அதற்காக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான் மாண்புமிகு எடப்பாடி மன்னிக்கவும் எடுபிடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் போட்ட வழக்கின்படி உடனடியாக எங்களை எல்லாம் கைது செய்யுங்கள், என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டுமென்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 
 

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே மோடி வருகின்ற நாள் நமக்கு துக்க நாள். எனவே, துக்க நாளை வெளிப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கறுப்பு கொடி பறக்க வேண்டும். அது பறக்கத்தான் போகிறது. அதுமட்டுமல்ல, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டு மோடி அவர்கள் எந்த தைரியத்தில் இங்கு வருகிறார்? எனவே, அதை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு அன்றைய தினத்தில் அனைவரும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.