Skip to main content

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
1


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வரை சந்திக்கச் சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சேலத்தில் இன்று மதியம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது. புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உள்ளே நுழைய முயன்ற அரசுப் பேருந்தையும் தடுத்து நிறுத்தினர்.
 

dmk


முன்னதாக திமுகவினர் கலைஞர் மாளிகையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர். 'இழுத்து மூடு இழுத்து மூடு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு', 'விடுதலை செய் விடுதலை செய் தளபதியாரை விடுதலை செய்', 'பொய் சொல்லாதே பொய் சொல்லாதே எடப்பாடியாரே பொய் சொல்லாதே,' என்று முழக்கங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திமுக நிர்வாகிகள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஜி.கே.சுபாஷ், எஸ்.டி.கலையமுதன், ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயப்பிரகாஷ் உள்பட நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..! விவசாயிகளுக்குப் பெருகும் ஆதரவு! (படங்கள்)

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். 

 

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே விவசாயிகள் போராட்டத்திற்கு, ஆதரவாக அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பரமணியம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே, சிலர் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.