ADVERTISEMENT

''மராட்டியத்தைவிட அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்'' - மு.க. ஸ்டாலின் பேச்சு!

09:51 PM Dec 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2007 முதல் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’, ‘காயிதேமில்லத் பிறை’ மற்றும் ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துவருகிறது.

சென்னை வேப்பேரியில் நடந்த விழாவில் அம்பேத்கர் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்னுடைய ஆருயிர் சகோதரர் திருமா என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் சுடர் விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன். நான் இப்போது பேசிய பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன். இதற்கு மேல் எவ்விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு இவ்விருதினைத் தருகிறேன் என்று சொன்னபோது, எனக்கு அச்சமிருந்தது. அம்பேத்கரின் விருதைப் பெறும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். மாநில ஆதிதிராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. என்னை மேலும் இச்சமூகத்திற்குத் தொடர் பணியை செய்ய ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளீர்கள். ‘சட்டமன்றத்தில் எனக்கென்று சாதிப் பெருமை கிடையாது. மிகமிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் நான். பட்டம் பெற்றவன் அல்ல. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிப் பள்ளியும்தான்’ என்றார் கலைஞர். கலைஞர் வழிவந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமை கொள்பவன். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயரிட்டவர் கலைஞர்தான். அந்த வகையில், மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழைத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்.

அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதில் பெருமை. அம்பேத்கர் போல் இந்தியாவில் யாருமில்லை. முதன்முதலில் முதல்வராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார். பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார். அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இவ்வாட்சி நடைபெறுகிறது. நான் முதல்வராகப் பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அமைச்சர்கள், அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசினேன். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள். வன்கொடுமை நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. இம்மண்ணில் சமூக பாகுபாடுகள், பேதம் கூடாது. இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண்தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றைப் புறம்தள்ள வேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் சொன்னேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான், அவர்களின் வாழ்க்கையைப் போல் என் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வேன் என உறுதிகொள்கிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT