Skip to main content

இருவரும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் அனைவரும் சிரிப்பீர்கள்: ஸ்டாலின் பேச்சு

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
mkstalin



திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் இன்று (05-02-2019) நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர், கழகத் தலைவர் அவர்களிடத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாக தெரிவித்தனர். 
 

அதன்பிறகு பேசிய ஸ்டாலின்,
 

எதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை நீங்களும் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கேற்ற வகையில் உங்கள் பிரச்னைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்க்கின்ற பொழுது 30 பேர் பேசட்டும் என்று நானும் சம்மதித்தேன். பிறரை பேசவிடவில்லை என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அதுமட்டுமல்லாமல் நீங்களும் பல வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கின்றீர்கள். கூடுமானவரையில் நீங்கள் சொன்ன பிரச்னைகள் அனைத்தையும் சுருக்கமாக நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயம் அதற்கு தீர்வு காண்பேன். அதேபோல் தேவேந்திர குல சமுதாயத்தைச் சார்ந்த சகோதரி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். நேற்றைக்குக் கூட அந்த சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். பல பிரச்னைகளை என்னிடத்தில் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். அவை அனைத்தையும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகின்றபொழுது நிறைவேற்றித் தரப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அருந்ததியர் சமுதாயத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் உள் ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதுபோல் அனைத்து சமுதாய மக்களுக்கும் கலைஞர் ஆட்சியில் இருந்தபொழுது பல நன்மைகள் செய்து கொடுத்துள்ளார். எனவே, மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற பொழுது நீங்கள் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் தருகின்றேன். வேலைவாய்ப்பு பிரச்னை ஒரு தீராத பிரச்னையாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே அந்தப் பிரச்னையைப் பற்றிச் சொல்லி இருக்கின்றீர்கள். அதற்காக ஒரு தொழிற்சாலை வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் தி.மு.கழக ஆட்சியில் இவையனைத்தும் நிறைவேற்றப்படும்.
 

அதேபோல் சுய உதவிக் குழுக்களைப் பற்றிச் சொன்னீர்கள். 1989ல் தி.மு.க ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தோம். அப்படிப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு இப்பொழுது ஒரு அனாதையாக கேள்வி கேட்க ஆளில்லாமல் இருக்கின்றது. மகளிர் சுய உதவிக் குழுவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ‘மணிமேகலை விருது கொடுத்தோம்’ ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை’ அதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், இப்போது இவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
 

மத்தியிலே ஆட்சி செய்கின்ற மோடி சொல்லி இருக்கின்றார். தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்ஜெட் ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.


 

mkstalin



எடப்பாடி பழனிசாமி ஆட்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இருவரும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் அனைவரும் சிரிப்பீர்கள். காரணம் அந்த அளவிற்கு ஒரு அசிங்கமான முறையில் ஒரு ஆட்சியை இருவரும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

ஜெயலலிதா இறந்த காரணத்தினால் ஒரு விபத்தாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்ந்தார். நான் நடந்த செய்தியைத்தான் சொல்கின்றேன். அந்த அளவிற்கு ஒரு மர்மமான முறையில் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதற்காக ஒரு விசாரணை கமிஷன் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கொள்ளை செய்தது போதாதென்று கொலை செய்யத் துணிந்திருக்கின்ற ஆட்சி தான் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி. எனவே இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை மத்தியிலிருந்து மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார். ஆகவே, இந்த ஆட்சிகளை அடியோடு ஒழிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே, அந்த வாய்ப்பை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு வருகின்ற தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பை நீங்கள் எல்லோரும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
 

நான் துவக்கத்திலேயே உங்களிடத்தில் குறிப்பிட்டுக் காட்டியதுபோல் கீழடி அகழாய்வு பிரச்னையைப் பொறுத்தவரையில் அதனை முறையாக ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்து இங்கு அருங்காட்சியமாக வைத்தால் தான் இங்கு நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஊருக்கு பெருமை வந்து சேரும், இந்த ஊருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமை வந்து சேரப்போகின்றது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு இந்தப் பெருமை கிடைக்கப்போகின்றது. அந்தப் பணியை நிச்சயமாக நிறைவேற்ற நான் காத்திருக்கின்றேன். இவ்வாறு பேசினார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.