Skip to main content

உலகின் 10 வது பணக்கார குடும்பம் என்ற குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
sp-velumani


வாரிசு அடிப்படையில் திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் உலகின் 10 வது பணக்கார குடும்பம் என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்லிவிட்டு ஸ்டாலின் கேள்வி எழுப்பட்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

 

 

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

பாரம்பரிய மிக்க ஒரு கட்சியான திமுகவில் வாரிசு அடிப்படையில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் 10வது குடும்பம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதலில் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகிறார்.

முந்தைய திமுக ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக அரசு 5 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 988 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 900 கோடி மில்லியன் லிட்டராக இருந்த குடிநீர் வினியோகத்தில் 2400 மில்லியன் லிட்டர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. 8 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு டெண்டர் வழங்காமல் பாதியிலேயே திமுக அரசு விட்டுச்சென்றது. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அதிமுக ஆட்சியில் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

 

 

இதே போல் சாலை, பாலங்கள், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட 7 துறைகளில் அதிமுக அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அனைத்து டெண்டர்களும் இணைய வழி டெண்டர்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி விளக்குகள் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 7 ஆண்டு பராமரிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு மின் கட்டணம் மிச்சமாகியுள்ளது.

ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் போது ஈழப்படுகொலைகளை தடுத்திருக்கலாம். அப்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது பேசுவது ஏன்? ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகி இருக்கிறார் முதலமைச்சர் ஆகவில்லை. அவர் முதல்வராகிவிட்டதாக நினைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.