Skip to main content

மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபைக் கூட்டம் : சில துளிகள்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
 Panchayat Council Meeting

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் என்ற மிகச்சிறிய கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று நடத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பாக இன்று முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் அதனை தொடங்கி வைத்தார்.

 

சிறிய தென்னந்தோப்பு ஒன்றில், மர நிழல்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த எளிய மேடையில் கீழே விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடினார்.  

கட்சி சார்பற்ற விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் தங்களது குறைகளைச் சொல்லுமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

 

திமுக குறித்தும், கலைஞர், ஸ்டாலின் பற்றியும் கிராமசபைக் கூட்டத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் பாடிய நாட்டுப்புறப் பாடகியான ஒருவர், தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையே தாங்கள்தான் என பாடலில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேடையேறி ஸ்டாலின் அருகில் வந்த மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர், குறைகளை முறையிட தாம் வரவில்லை என்றும், ஒருமுறை அவரைத் தொட்டுப் பார்த்ததே தமக்கு மனநிறைவைத் தருவதாகவும் கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது.

 

கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பலரும், ஸ்டாலின் வடிவில் கலைஞரைப் பார்ப்பதாக உருக்கத்துடன் கூறினர். கிராமசபைக் கூட்டத்தில், குடும்பத்துடன் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறுமிகள், குழந்தைகள் என திருவிழாவுக்கு வந்த கூட்டம் போல் காணப்பட்டது.

 

இந்தக் கிராமத்திற்கு வந்தது கோவிலைப் போன்ற உணர்வைத் தந்தது எனக் கூறி தனது பேச்சை ஸ்டாலின் தொடங்கியது, கூடியிருந்த மக்களை நெகிழச் செய்வதாக இருந்தது. 

கிராமசபைக் கூட்டத்தின் நிறைவில், அனைவரும் தமது வடிவில் கலைஞரைப் பார்ப்பதாகவும், அண்ணனாக, அப்பாவாக, தம்பியாக பார்ப்பதாகவும் கூறியதை நெகிழ்வுடன் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அனைவரது குறைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

 

 

கிராமசபைக் கூட்டத்தின் நிறைவுரையில், தாம் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏ அல்ல என்றும், திருவாரூரில் திமுக சார்பாக யார் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும், தம்மையும் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாகவே மக்கள் கருதிக் கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

 

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்துடன் திமுக தொடங்கியுள்ள இந்த தொடர் நிகழ்வுத் திட்டம், 2015ல் ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தைப் போல் பெரும் வரவேற்பைப் பெரும் என கூறப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது