Skip to main content

 ’’சொந்த நாட்டவர்களிடமே போராடக்கூடிய நிலைமைக்கு நாம் வந்திருக்கின்றோம்”-மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (23-07-2019), சென்னை மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

’’இந்த மணவழகர் மன்றம் என்பது ஒரு நீண்ட நெடிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய மன்றமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 63 ஆண்டுகளாக தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் இந்த மன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் உள்ள உணர்வோடு, பூரிப்போடு, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், எனக்கு 3 வயது இருக்கும் பொழுது பிறந்த மன்றம் இந்த மன்றம். தொடர்ந்து நான் பார்த்து வருகின்றேன் இந்த மன்றத்தின் செயலாளராக இருக்கக்கூடிய கன்னியப்பன் அவர்களை இந்த நேரத்தில் எவ்வளவு பாராட்டினாலும் அது தகுதியாகும்.

 

s

 

தொடங்கிய காலத்தில் இருந்து இதுநாள் வரையில் தொடர்ந்து 5 வருடமாக இந்த விழாவில் நான் பங்கேற்று வருகிறேன். 5 வருடங்களாக நானும் பார்த்துக் கொண்டு வருகின்றேன் என்ன அழைப்பிதழ் வருகின்றதோ அதே மாடல் தான். அதே ப்ளாக் தான் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதை சிக்கனம் என்று கூட சொல்லக்கூடாது, ஒரு கொள்கை - லட்சியம். சால்வையோ பட்டாடையை பொன்னாடையும் கிடையாது. ஒரு கைத்தறி துண்டு தான். அதைக் கூட நான் சிக்கனம் என்று சொல்ல மாட்டேன் அது தான் நாட்டிற்கும் எங்களுக்கும் பயன்படுகின்றது. சால்வை போட்டால் குளிர்காலத்தில்தான் பயன்படும். பொன்னாடை போர்த்தினார் எதற்கும் பயன்படாது. அதைத்தான் சொல்கின்றேன், ஒரு கொள்கையோடு லட்சிய உணர்வோடு விழா நடத்துவதிலும் ஒரு தனி முத்திரையை நம்முடைய கன்னியப்பன் அவர்கள் பதித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்பதை நான் பெருமையோடு இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

 

அப்படிப்பட்ட ஒரு பெருமைக்குரிய பாரம்பரியம் மிக்க இந்த அமைப்பு நடத்தும் விழாவில், தொடர்ந்து பங்கேற்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கின்றது என்று சொன்னால், உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்கு கூட சொன்னார்கள் இந்த நாட்டில் எத்தனையோ தமிழ் அமைப்புகள் விதவிதமான பெயரில் இருக்கின்றன என்று. அவைகள் எல்லாம் இப்படி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றதா அல்லது செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றதா அல்லது செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், தொடர்ச்சியாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய அமைப்புகள் எவை என பார்த்தீர்களென்றால் ஒரு சிறு பட்டியல் போடலாம். அந்த சிறு பட்டியலில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கக்கூடிய மன்றம் தான் இந்த மணவழகர் மன்றம் என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.

 

நீதியரசர்கள் ஐயா கோகுலகிருஷ்ணன், இலக்குமணன் அவர்களின் பொறுப்பில் அவர்கள் தலைமை ஏற்று நடத்தக்கூடிய இந்த மன்றம் இன்றைக்கு இவ்வளவு கம்பீரமாக வளர்ந்து வந்திருக்கின்றது. எப்படி திரு.வி.க அவர்களை ஒரு அபூர்வமான மனிதர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோமோ, அதேபோல் இந்த மன்றத்தை நடத்தக்கூடியவர்கள் தான் நம்முடைய நீதியரசர்கள் ஐயா கோகுலகிருஷ்ணன் அவர்களும் இலக்குமணன் அவர்களும்.

 

இந்த விழாவிற்கு நான் வந்ததற்கு முதல் காரணம் இவர்களை வணங்குவதற்காக தான் நான் வந்திருக்கின்றேன் அதுதான் எனக்கு இருக்கக்கூடிய பெருமை அதற்கு இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

 

நம்முடைய செயலாளர் அவர்கள் பேசுகின்ற பொழுது சொன்னார் தொடர்ந்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் இந்த விழா நடைபெறுகின்ற பொழுதெல்லாம் தொடர்ந்து வந்திருக்கின்றார். உடல் நலிவுற்ற நேரத்தில்தான் வர முடியாத சூழ்நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார் என்று. இன்றைக்கு அவர் நம்மிடத்தில் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வர முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த விழாவிற்கு மறக்காமல் உறுதியோடு கலந்து கொள்ளக்கூடிய தலைவராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக எத்தனையோ மேடைக்கு அவர் சென்றிருப்பார்.

 

எத்தனையோ மேடைக்கு சென்றாலும் தமிழ்விழா நடக்கின்ற அந்த மேடைக்கு தலைவர் செல்லும்பொழுது தானாக ஒரு மகிழ்ச்சி - பூரிப்பு வரும். அவரின் முகத்தைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட மேடைகளில் இந்த மணவழகர் மேடையும் அமைந்திருக்கின்றது என்று சொன்னால் நிச்சயமாக மிகையாகாது. அத்தகைய பெருமை படைத்த தலைவர் கலைஞர் அவர்களை இழந்து ஓர் ஆண்டு நிறைவு பெறக்கூடிய நிலையில் இருக்கின்றோம். தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்பது நாட்டிற்கு பெரிய இழப்பு - தமிழகத்திற்கு பெரிய இழப்பு - தமிழர்களுக்கு பெரிய இழப்பு – தமிழ் இனத்திற்கு பெரிய இழப்பு. அதேபோல் இந்த மணவழகர் மன்றத்திற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. அதைத்தான் நம்முடைய செயலாளர் அவர்கள் இங்கு பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுச் சொன்னார்.

 

ஆண்டுதோறும் அவரை இங்கு அழைத்து அழகு பார்த்தீர்கள். இன்றைக்கு அவருடைய மகனாக இருக்கக்கூடிய என்னை மறக்காமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதே போல் அழைப்பை நானும் மறுப்பதில்லை, மறப்பதும் இல்லை தொடர்ந்து நானும் வந்து கொண்டுதான் இருக்கின்றேன். திரு.வி.க அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர் அவர். இங்கு சொன்னார்கள், தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு இனிய நண்பராக விளங்கக் கூடியவர் திரு.வி.க அவர்கள். தமிழகத்தில் அந்தக் காலத்தில் தேசிய இயக்கத்தை வளர்த்தவர்கள் 3 பேர், யார் என்று கேட்டீர்களென்றால், முதலியார், நாயக்கர், நாயுடு என்று சொல்வார்கள், "என்னடா ஜாதி பெயரைச் சொல்கின்றானே என்று நினைத்துவிடாதீர்கள்". அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் அதனால் தான் நான் திரும்ப அதை நினைவு படுத்துகின்றேன். முதலியார் என்பது திரு.வி.க அவர்களையும், நாயக்கர் என்பது தந்தை பெரியார் அவர்களையும், நாயுடு என்பது வரதராஜர் அவர்களையும் குறிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது. அந்த மூவர்கள் தான் தமிழகத்தில் தேசிய காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தவர்கள். அரசியல் விடுதலை மட்டும் போதாது சமூக விடுதலையும் அவசியம் என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார்கள்.

 

அந்த சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்துதான் திராவிடர் கழகம் ஆனது அதில் இருந்து வந்தது தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். இந்த வரலாறுகள் எல்லாம் இங்கு இருக்கக்கூடிய முன்னோடிகளுக்கு நன்றாக தெரியும். மணவழகர் மன்றம் அழைத்ததும் கலைஞரின் தேதி கொடுத்தார். ஏன் ஓடோடி வந்தார். அதே போல் இன்றைக்கும் நான் மறக்காமல் மறுக்காமல் நான் ஏன் வருகின்றேன். அதற்கு என்ன காரணம் திராவிட இயக்கத்திற்கு தந்தை பெரியார் என்று சொன்னால் தாய் திரு.வி.க அதுதான் உண்மை. தந்தை பெரியார் அவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய நேரத்தில் திரு.வி.க அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். அதன் பிறகு அவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டு அவரும் வெளியேறினார். 

 


பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி, நீதிக் கட்சியில் இருந்து திராவிடர் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக திரு.வி.க அவர்கள் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னாலும், தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுது அழைத்தாலும் அவர் நடத்தக்கூடிய மாநாட்டில் திரு.வி.க அவர்கள் பங்கேற்காமல் இருந்ததில்லை. மறுப்பேதும் சொல்லாமல் அனைத்து மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், கோவை மாநாட்டில் தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மை அவர்களின் படத்தை திறந்து வைத்தது திரு.வி.க அவர்கள் தான். அதற்குப் பிறகு ஈரோடு மாநாட்டில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார்.

 

கடலூர் மாநாட்டில் திராவிட நாடு படத்தை திறந்து வைத்த வரும் திருவி.க அவர்கள் தான். எனவே இப்படி திராவிட இயக்கத்தின் ஆரம்பகால மாநாடுகள் அனைத்திலும் சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்று திருவிக அவர்கள் உரையாற்றி இருக்கின்றார்கள். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவராக திரு.வி.க அவர்கள் செயல்பட்டார்கள். பெரியாருக்கும் திருவிக அவர்களுக்கும் நட்பு இறுதிவரை தொடர்ந்து இருந்து வந்தது. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் நிரந்தரமாத் தங்கி இருந்தது ஈரோட்டில் தான். ஆனால், சென்னைக்கு அவர் எப்பொழுது வந்தாலும் திரு.வி.க அவர்களை சந்திக்காமல் இருந்ததில்லை. இறுதியாக திரு.வி.க அவர்கள் மறைந்த நேரத்தில் தன்னுடைய நண்பருக்காக இறுதி நிகழ்ச்சியில் முழுமையாக கடைசி வரைக்கும் இருந்து மரியாதை செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

 

திரு.வி.க அவர்கள் மொழி, இனம் ஆகியவற்றால் திராவிட இயக்கத்தை ஆதரித்தாலும் சமூகப் பற்றாளராக இருந்தவர். ஆன்மீக இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் திரு.வி.க அவர்கள். அதனால் அவர் இறுதி நிகழ்ச்சி நடக்கின்ற நேரத்தில் தமிழறிஞர் மு.வ அவர்களும், ஆசான் ஞானசம்பந்தர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களிடத்தில் ஒரு வேண்டுகோளை வைத்தார்கள். என்ன வேண்டுகோள் என்றால், தமிழ் மறைகளாக இருக்கக்கூடிய தேவாரம் திருவாசகம் படிதான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று திரு.வி.க அவர்கள் விரும்பிக் கொண்டிருந்தார். எனவே அதனை செய்ய வேண்டும், எப்படி இதனை தந்தை பெரியார் இடத்தில் கேட்பது என்று அச்சப்பட்டு, ஏன் கொஞ்சம் பயத்தோடு, கோபப்படுவாரா என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருவரும் சென்ற தந்தை பெரியாரிடத்தில் சென்று கேட்ட பொழுது, தந்தை பெரியார் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அதுதான் திரு.வி.க.வின் விருப்பமாக இருந்தால் அதை செய்யுங்கள் என்று சொன்னவர்தான் தந்தை பெரியார் அவர்கள். தமிழ் மறை பாடல்கள் பாடப்பட்டு தன் நண்பருடைய உடல் அடக்கம் செய்து முடிக்கும் வரையில், கடைசி வரையில் இருந்து மரியாதை செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். இத்தகைய அரசியல் பண்பாட்டைத்தான் நாம் மறந்து விடக்கூடாது என்று இந்த நேரத்தில் நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

 

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் மனிதர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் - திரு.வி.க அவர்கள் – பேரறிஞர் அண்ணா அவர்கள் - தலைவர் கலைஞர் அவர்கள் - நமக்கு உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றார்கள். சமூகக் கொள்கைகளில் தந்தை பெரியாரும், திரு.வி.க அவர்களும் மாறுபட்டு இருந்தாலும், அவர்களை இணைத்து வைத்திருந்தது தமிழ் பற்று  - தமிழ் பண்பாடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால், அப்படிப்பட்ட தமிழுக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கின்றது அதைத்தான் தலைமை உரையாற்றிய நீதியரசர் அவர்கள் ஆபத்து வந்திருக்கின்றது என்று அழகோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாம் ஏற்கனவே அதனை தடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு அதில் முழு அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம். அதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.

 

எனவே, இரண்டு ஆண்டு காலமாக ஒரு தோழமை, நட்பு உணர்வோடு மக்களுடைய பிரச்சினைகளுக்காக வாதாடி - போராடி அந்தப் பயணத்தை நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த காரணத்தினால், அதற்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணி பெற்றிருக்கின்றது. அதைக் கூட இன்றைக்கு கொச்சைப்படுத்தி பேசுகின்ற காட்சிகளையெல்லாம் கூட பார்க்கின்றோம். சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை பார்த்திருப்பீர்கள் என்று சொன்னால் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஏதோ மக்களை ஏமாற்றி நாம் அந்த வெற்றியை பெற்றதாகவும், அத்தோடு நிறுத்தினால் கூட பரவாயில்லை மக்களை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி இருக்கின்றோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதனால்தான் நேற்று முன் தினம் தேனியில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசுகின்ற பொழுது நான் சொன்னேன், ஒரு தொகுதியில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்றோம் அங்கு நாங்கள் மிட்டாய் கொடுக்கவில்லை! நீங்கள் அல்வா கொடுத்து வென்றீர்களா என்ற ஒரு கேள்வியை கேட்டேன்?

 

தமிழர்களை அவ்வளவு இளிச்சவாயர்களாக கொச்சைப்படுத்தி பேசக்கூடிய நிலையினை பார்த்தோம். எனவே நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது. இன்றைக்கு தமிழுக்கும் நம்முடைய இனத்திற்கும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கின்றது. அந்த வேதனை இன்றைக்கு சூழ்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

 

கட்சி வேறுபாடுகள், மத மாச்சரியங்கள், சர்வாதிகார வேறுபாடுகள் ஆகியவற்றைக் களைந்து நம் மொழியைக் காக்க - நம்முடைய இனத்தை காக்க - நாம் ஒன்று சேர வேண்டிய காலக்கட்டம் வந்திருக்கின்றது.

 

மொழி தான் நம்மை இணைக்கக்கூடிய மந்திரம், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் முழுமையாக தமிழைப் பேசிய அரசியல் தலைவர்களில் முதலாவது தலைவர் யார் என்று கேட்டீர்கள் என்றால் திரு.வி.க அவர்கள்தான். முழுமையாக தமிழைப் பேசி மேடைகளில் முழங்கியவர். அந்தக் குரல் தான் நாடாளுமன்றத்தில் இப்பொழுது ஒலிக்கத் துவங்கி இருக்கின்றது.

 

“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு  முன் தோன்றி மூத்த குடி மகள் அன்னைத் தமிழ் மொழி” இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டது.

தந்தை பெரியார் வாழ்க - அறிஞர் அண்ணா வாழ்க - தமிழ் வாழ்க - தலைவர் கலைஞர் வாழ்க - என்று நாடாளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றது என்று சொன்னாலும் சமத்துவம் - சகோதரத்துவம் - ஜனநாயகம் - மதச்சார்பின்மை – மார்க்சியம் - தொழிலாளர் ஒற்றுமை ஆகிய சொற்கள் எல்லாம் இன்றைக்கு நாடாளுமன்ற அவையில் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது என்று சொன்னாலும் இவை அனைத்தும் திரு.வி.க அவர்களுக்கு பிடித்தமான சொற்கள் அவருடைய உணர்வு இன்றைக்கு அங்கு எதிரொலிக்கத் துவங்கி இருக்கின்றது.

எனவே தி.மு.க.வின் குரலை மட்டும் அல்ல திரு.வி.க.வின் குரலை இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றார்கள். இது ஏதோ ஒருநாள் முழங்குகின்ற முழக்கம் மட்டுமல்ல நித்தமும் தமிழுக்காக தமிழ் மக்களுக்காக நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

 

இங்கு சொன்னார்களே, மும்மொழித் திட்டத்தை புகுத்துவதற்கு கஸ்தூரி ரங்கன் குழுவின் அந்த அறிக்கை அறிவுரைப்படி மத்திய அரசு இப்பொழுது திட்டமிட்டு கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை அப்படி திட்டமிட்டு அந்தப் பணியைத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் 1965-யைப் பார்க்க வேண்டும் என்று நாம் குரல் எழுப்பினோம்.

 

உடனே அதற்கு வாபஸ் என்ற செய்தி வந்துள்ளது. எனவே இந்தி கட்டாயம் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பார்த்தோம், தென்னக ரயில்வேயில் தமிழில் பேசக் கூடாது இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் பேசிட வேண்டும் என்று ஒரு ‘சர்குலர்’ வெளியிட்டிருப்பதாக உத்தரவு போட்டார்கள். அந்த உத்தரவு போட்டாதும் தி.மு.கழகம் உடனடியாக எதிர்த்தது இதுபோன்ற உத்தரவிற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்று குரல் எழுப்பினோம். நம்முடைய கழக எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் தென்னக ரயில்வே நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு அதன் பிறகு உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது மட்டுமல்லாமல் அந்த அதிகாரியே செல்பேசியில் என்னோடு தொடர்பு கொண்டு “நாங்கள் உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டோம்” என்று சொல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தந்திருக்கின்றோமா, இல்லையா.

 

தபால் துறையில் தேர்வுகளை இந்தியில் தான் எழுத வேண்டும் என்று அந்தத் தேர்வுகளையும் நடத்தி இருக்கின்றார்கள். அப்படி, நடத்திய தேர்வை ரத்து செய்ய வைத்ததும் நாம் தான், நம்முடைய நாடாளுமன்ற எம்.பி.க்கள் குரல் எழுப்பி அதனை ரத்து செய்ய வைத்திருக்கின்றோம். ஏன் தமிழ் மொழியிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழில் வெளிவரக்கூடிய சூழ்நிலையை இன்றைக்கு ஏற்படுத்தி தந்திருக்கின்றோமா, இல்லையா.

 

மத்திய அரசு ஒரு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர இருக்கின்றது. அந்தக் கொள்கையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு பரிசீலினை செய்ததை, விரைவில் நாம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க இருக்கின்றோம். எனவே திரு.வி.க போன்றவர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள். நாமும் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய நிலைமையில் தான் இப்பொழுது இருக்கின்றோம். நம்முடைய சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு இப்பொழுது தள்ளப்பட்டிருக்கின்றோம். அன்னிய நாட்டவரிடம் அவர்கள் போராடினார்கள், நாம் இப்பொழுது சொந்த நாட்டவர்களிடம் போராடக்கூடிய நிலைமை வந்திருக்கின்றது. எனவே, அவர்கள் எல்லோரும் போராடிப் பெற்ற சுதந்திரத்தை போற்றிக்காக்க வேண்டிய சூழ்நிலையை, இன்றைய மத்திய அரசின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது. ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு - ஒரே ஆணையம் என்றும் சொல்கின்றார்கள்.

 

அடுத்து மாநிலங்களின் மொத்த அதிகாரங்களையும் பறித்து மத்திய அரசு என்ற ஒரே அரசு தான் என சொல்லக்கூடிய சூழ்நிலை வந்து கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தையே படு குழிக்குள் தள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சமத்துவம் - சமதச்சார்பின்மை என்ற தத்துவங்களுக்காக மட்டுமல்ல அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் நாம் போராட வேண்டிய காலமாக மாறிவிட்டது. இந்த ஆபத்தை தமிழகம் உணர்ந்த அளவிற்கு மற்ற மாநிலங்கள் உணரவில்லை என்ற வருத்தம்தான் இருந்து கொண்டிருக்கின்றது.

 

தமிழகத்திலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக மட்டுமல்ல இந்தியாவிற்கும் சேர்த்து பேசக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு வந்திருக்கின்றது. எனவே, இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கக்கூடிய இரண்டாவது சுதந்திரப் போருக்கான தகுந்த வலிமையை கொடுக்கக்கூடிய தலைவராக இருக்கக்கூடிய திரு.வி.க அவர்களின் நினைவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கான போராட்டத்திற்கு வலுசேர்க்க, நிச்சயமாக, உறுதியாக சொல்லுகின்றேன் இந்த விழா பயன்படும் பயன்படவேண்டும், என்ற அந்த உறுதியோடு 63-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மணவழகர் மன்றம் இன்னும் பல சிறப்புகள் பெற்று, இன்னும் பல திறமைகள் பெற்று, இனத்திற்காக – மொழிக்காக – கலாச்சாரத்திற்காக தொடர்ந்து பாடுபடும் பணியாற்றும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த வகையில் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய அத்துனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வாய்ப்பிற்கு நன்றி கூறி என் உரையை நிறைவு செய்கின்றேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

“கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் திமுகதான்” - ஓ.பி.எஸ் தாக்கு

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

DMK has committed betrayal in the Kachchatheevu issue says o panneerselvam

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு தாரை வார்ப்பு தொடர்பாக ஒப்பந்தம்தான் போடப்பட்டது என்றும், சட்டம் இயற்றப்படவில்லை என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தந்தவர் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் தான் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை கண்டித்து அப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும், அன்றிலிருந்து இன்று வரை அ.தி.மு.க. தான் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சினைப் பார்க்கும்போது, அவர் அடிக்கடி சொல்லும் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

 

இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் சர்வே எண் 1250 என்பதையும், இதனை பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார் என்பதையும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம் என்பதையும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதையும் வரலாற்றுப் பதிவேடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன இவையெல்லாம், கச்சத் தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

 

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பி.சி. ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத் தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைச் செய்யத் தவறி விட்டார். இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கேள்விக்கணைகளை தொடுத்தபோது, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர் கலைஞர். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு கலைஞருக்கு எல்லாம் தெரியும் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர் ஜெயலலிதா. குறைந்தபட்சம் இரண்டு முறை மிக விரிவான அளவில் மத்திய அரசு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருடன் விவாதித்ததாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஸ்வரண் சிங் மாநிலங்கள் அவையில் பேசியிருப்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்கள். எனவே, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருக்கு தெரியாது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. கச்சத்தீவு தாரை வார்க்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி தாரைவார்ப்பினை தடுக்கவோ தி.மு.க. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஒப்பந்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெயரளவிற்கு, சம்பிரதாயத்திற்கு, மென்மையான முறையில் 21-08-1974 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய திரு. ஆலடி அருணா அவர்கள், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா என்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டபோது, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது; “தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே, தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்தபோது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் படித்து கச்சத்தீவு வரலாற்றினை தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாபெரும் துரோகத்தை செய்த மாநில அரசினைக் கண்டிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த உண்மையை மறைத்து பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்.

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, அதனை ஆமோதித்து பதில் மனுவை தாக்கல் செய்யாமல், “... uniform stand has to be taken both by the Central and State Governments" 660 கருத்து தி.மு.க. அரசால் அப்போது தெரிவிக்கப்பட்டதுதான் துரோகம். இந்தத் துரோகங்களை செய்தது தி.மு.க. கச்சத்தீவில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மாநில சுயாட்சி, மத்திய-மாநில வரிப் பங்கீடு என எல்லாவாற்றிலும் பல துரோகங்களை செய்த கட்சி தி.மு.க. இப்பொழுது வாய்கிழிய பேசும் தி.மு.க. தலைவர், 17 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலே வளம் கொழிக்கும் இலாக்காக்களை வைத்துக் கொண்டிருந்தபோது கச்சத்தீவு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்