Skip to main content

’’மிகச் சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை புத்தகம் வெளிவந்திருக்கின்றது’’-மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/07/2019 | Edited on 13/07/2019


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , நேற்று (12-07-2019) கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிய உரையின்விவரம் பின்வருமாறு:

v

 

’’அன்புள்ள, தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய, பொருளாதாரமும் இலக்கியமும் இரு கண்கள் என்று ஏங்கியவருக்குரிய மத்திய முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களே, நேற்றைய தினம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், நாடாளுமன்றத்தில் புயலாகவும் - இலக்கிய மேடைகளில் தென்றலாகவும் வீசக்கூடிய அண்ணன் வைகோ அவர்களே, தமிழ் இலக்கியம் என்றாலே 'நீதி இலக்கியம்' தான் நீதி அரசியாக மட்டுமல்ல இலக்கிய அரசியாகவும் இங்கு வருகை தந்து உரையாற்றி இருக்கக்கூடிய நீதியரசர் சகோதரியார் விமலா அவர்களே, இந்த நூலின் ஆசிரியர் இதுவரை கவிப்பேரரசாக மட்டுமே இருந்து இனி உரைப்பேரரசாகவும் போற்றப்படக்கூடிய விழா நாயகனாக, நிறைவாக ஏற்புரை நிகழ்த்தயிருக்கக்கூடிய கவிப்பேரரசு மதிப்பிற்குரிய வைரமுத்து அவர்களே, இந்த விழாவினை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய வெற்றித் தமிழர் பேரவையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அன்பிற்குரிய தமிழ் சான்றோர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

 

காலம் கடந்து கொண்டிருக்கின்றது. நீண்ட நேரமாக நீங்களும் இந்த அரங்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நான் சுருக்கமாக இந்த நூலில் இருக்கக்கூடிய சில செய்திகளை தலைப்புச் செய்திகளாக எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது. முதலில் இந்த விழாவிற்கு தலைமை ஏற்று இந்த தமிழாற்றுப்படை நூலினை வெளியிடக்கூடிய சிறப்பானதொரு வாய்ப்பினை, சிறப்பான வாய்ப்பு என்று சொல்வதை விட அரிய வாய்ப்பை, ஏன் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நல்வாய்ப்பை நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்காக முதலில் நான் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொட்ட துறைகளிலெல்லாம் வெற்றி பெறக் கூடிய ஆற்றலைக் கொண்ட ஒரு மிகப்பெரிய தமிழ் அறிஞராக அவர் விளங்கிக் கொண்டிருக்கின்றார். முதன்முதலில் அவருடைய வைகறை மேகங்கள் கவிதை தொகுப்பு இலக்கிய உலகில் இருக்கக்கூடிய பலரின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்தது.

 

v

 

அதேபோல், முதன் முதலில் திரைப்படப்பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பட்டி தொட்டிகளெல்லாம் பரவக்கூடிய எல்லோரும் உச்சரித்து பாடக்கூடிய நிலை உருவாகியிருந்தது. திரைத்துறையில் அவர் அளவுக்கு தேசிய விருது வாங்கிய கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. அவர் எழுதிய புதினம், கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த இரண்டு காவியங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட மகத்தான கவிஞரிடமிருந்து நமக்கு கிடைத்திருப்பது தான் இந்த தமிழாற்றுப்படை என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த புத்தகத்தின் துவக்கத்தில் அவர் எழுதி இருக்கின்றார். என்னவென்றா, எனக்கு நண்பராய் - மந்திரியாய் - நல்லாசிரியருமாய் விளங்கிய கலைஞர் அவர்களே, நீங்கள் இல்லாமல் வெளிவரக்கூடிய இந்த நூலில் நீங்கள் இருக்கின்றீர்கள். எவ்வளவு உணர்ச்சியோடு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நன்றியுணர்ச்சிக்கு பெயர் தான் நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இல்லாவிட்டாலும் இந்த நூலில் அவர் இருக்கின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார். நூலில் மட்டுமா இருக்கின்றார், கவிஞர் அவர்களே உங்கள் நெஞ்சில் - எண்ணத்தில் - எழுத்தில் இருக்கின்றார்.

 

கலைஞருடைய நினைவின்றி கவிஞரால் இருக்கவே முடியாது. அவரை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞர் பெறாத விருதுகள் இல்லை - கிடைக்காத பாராட்டுகள்  இல்லை - செல்லாத நாடுகள் இல்லை -  அவர் எழுதாத எழுத்துக்கள் இல்லை - தொடாத சிகரங்கள் இல்லை. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அங்கிருந்தபடி கலைஞர் தான் எனக்கு ‘தமிழ் ஆசான்’ என்று உரத்த குரல் கொடுப்பதில் அவர் என்றைக்கும் பின்வாங்கியதில்லை. கவிப்பேரரசு அவர்களைப் பற்றி நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால். அற்ற குளத்தில் பறவை போல் இல்லாமல் கொட்டியும் ஆம்பலும் எல்லா நிலையிலும் கலைஞரோடு ஒட்டியிருந்தவர் நம்முடைய கவிப்பேரரசு. கடந்த 30 ஆண்டு காலமாக அவருடைய புத்தக வெளியீட்டு விழாவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கின்றாரா, அதிகாரம் அவர் கையில் இருக்கின்றதா, மத்திய அரசோடு நல்லுறவோடு இருக்கின்றாரா, அரசியல் சூழல் சாதகமாக இருக்கின்றதா போன்று அரசியலில் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் கிஞ்சிற்றும் அதைப்பற்றி கவலைப்படாமல் சிந்தித்துப் பார்க்காமல் தலைவர் கலைஞர் அவர்களுடைய கரத்தால் தான் தன்னுடைய புத்தகம் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தவர்.

 

v

 

கலைஞரின் மாணவனுக்கு உரிய பண்போடு, பணிவோடு செயல்பட்டவர்தான் நம்முடைய கவிப்பேரரசு அவர்கள். கவிப்பேரரசு என்ற பட்டமே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள்  வழங்கிய பட்டம் தான். இவருக்கு தமிழ் தான் முதல் காதலி. இவருடைய எழுத்தாற்றலைப் பொறுத்தவரையில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் வரையில் சென்று சேர்ந்தவை. தன்னுடைய இலட்சியத்தை - கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலையும் துணிவையும் பெற்றவர் நம்முடைய கவிப்பேரரசர்.

 

அந்தத் துணிவு மிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடு தான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. காரணம் தமிழ் மொழியின் தன்மையை - திராவிட இனத்தின் பெருமையை எப்படியாவது சிதைத்திட வேண்டும். வடமொழி ஆதிக்கத்தைக் எப்படியாவது நிறுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அதற்காக பலர் துடிதுடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளக் கூடிய வலிமை தரக்கூடிய நூலாக இந்த தமிழாற்றுப்படை நம் கைக்கு கிடைத்திருக்கிறது அதுதான் உண்மை. தமிழர்களுடைய வரலாற்றை எவராலும் மறக்க முடியாது என்பதை சொல்லும் விதமாக தமிழாற்றுப்படை நூலை நம்முடைய கவிஞர் அவர்கள் நமக்கு தந்திருக்கின்றார். தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் வாழ்கின்றார்கள். உலகில் இருக்கக்கூடிய 57 நாடுகளில் ஏறத்தாழ அரைகோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு.

 

தொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார். தொல்காப்பியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட வடிவம் தான் என்பதை நம்முடைய கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.

 

கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு அவர்கள். ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஏன், திராவிட ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் அவர்களையும் கவிஞர் மறக்கவில்லை. தலைவர் கலைஞரின் பெருமுயற்சியால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ என்கின்ற அங்கீகாரம் கிடைத்திருக்கின்றதே, அதையும் உணர்வோடு கவிஞர் அவர்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

 

மகனுக்கு தாய் பெயர் வைப்பது தான் வழக்கம். ஆனால், தாய்க்கு பெயர் வைத்த மகன் தான் நம்முடைய அண்ணா. நம்முடைய தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தவர் அறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவைப் பற்றியும், அவர் உருவாக்கி இருக்கக்கூடிய மறுமலர்ச்சியைப் பற்றியும் மிகச் சிறப்பாக நம்முடைய கவிஞர் எடுத்துக்காட்டி இருக்கின்றார்கள்.

 

திரை உலகில் தனக்கு முன்னோடிகளாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன். அதுபோல் இலக்கிய உலகில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோர். தன்னுடைய சமகால கவிஞர் கவிக்கோ. அப்துல் ரகுமான் என அனைவரையும் இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கின்றார். இவ்வளவு பெயரையும் எழுதி விட்டு தலைவர் கலைஞர் அவர்களை விட்டு விடுவாரா இவர். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களின் 70 ஆண்டுகால திரைத் தமிழை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடைய சாதனைகளை – சிறப்புகளை - கலைஞர் ஏற்படுத்திய அந்த இராசாயன மாற்றத்தை இந்த நூலில் அவர் பதிவு செய்திருக்கின்றார்.

 

தலைவர் கலைஞரின் பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் எல்லாம் இன்றைக்கும் பேசக்கூடிய வகையில் புகழ் பெற்றவை. அதைத்தான் நம்முடைய முன்னாள் மத்திய அமைச்சர் இங்கு பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுச் சொன்னார். ஏனையோர் எழுத்துக்கள் எல்லாம் கதாபாத்தி ரங்களோடு உரையாடுகின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்களோ, கதாபாத்திரங்களை தாண்டி சமூகத்தோடு உரையாடுகின்றன. ஏனையோர் உரையாடலோ திரையோடு தேய்ந்து ஒழிகின்றது. ஆனால், கலைஞரின் உரையாடலோ திரையைக் கிழித்தெறிந்து தெருவுக்கே வருகின்றது. இதுதான் கலைஞரின் பேராற்றல்.

 

நான் நிறைவாக இந்த விழாவில் கூற விரும்புவது, நம்முடைய முன்னாள் மத்திய அமைச்சர்  அழகோடு எடுத்துச் சொன்னார்கள். இன்றைக்கு நம்முடைய தமிழ் மொழிக்கு - தமிழ் இனத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்தைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

 

தமிழினுடைய பெருமைகளை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் மும்மொழித் திட்டம் திணிக்கப்படக்கூடிய ஒரு நிலை வந்திருக்கின்றது. இரயில்வே துறையில் துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையை துவங்கி இருக்கின்றார்கள். நாம் எல்லோரும் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அப்படி போராட வேண்டிய நிலைக்கு நமக்கு துணையாக கவிப்பேரரசு அவர்களின் தமிழாற்றுப்படை நமக்கு ஒரு ஆயுதமாக கிடைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழாற்றுப்படை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கின்ற அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளை நன்றியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கின்றேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !