Mistakes like this will not happen again

திண்டுக்கல்லில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களைப் பெண்களுக்கு வழங்கினார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்ற நகை மோசடி தொடர்பாக பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை ஏறத்தாழ 15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் போது சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளை அனுப்பாமல் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 30 சதவீதம் அளவிற்கு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்த பின்னர் இது போன்ற தவறுகள் இனி நடைபெறாது. நகை மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிர்வாகஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளி முடிந்ததும் வெளியிடப்படும். எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத்தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறினார்.