Missing boy ... corpse rescued with friend

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன். இவரது 10 வயது மகன் ஜெகதீஸ்வரன் அதே ஊரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். அவரது குடும்பத்தினர், சகோதரிக்குச் சாப்பாடு கொடுப்பதற்காக ஜெகதீஸ்வரனிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியுள்ளனர். சகோதரிக்குச் சாப்பாடு கொடுக்கச் சென்ற ஜெகதீஸ்வரன் தனது நண்பன் வெங்கடேஷயும் கூட அழைத்துச் சென்றுள்ளார். மாலை வரை ஜெகதீஸ்வரன் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துவிட்டு ஜெகதீஸ்வரன் தந்தை முருகன் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஜெகதீஸ்வரன் சகோதரி படித்த தனியார் பள்ளிக்குப் பின்புறம் உள்ள கல்குட்டை என்ற ஏரியில் தேடிப் பார்ப்பதென்று முடிவு செய்தனர். அதன்படி காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அந்த ஏரியில் இறங்கித்தேடினார்கள். இரவு 10 மணி அளவில் ஜெகதீஸ்வரன் அவரது நண்பன் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர். சகோதரிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற ஜெகதீஸ்வரன் தனது நண்பர்களை அழைத்துச் சென்றிருக்கலாம் இருவரும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கி இருக்கலாம் நீச்சல் தெரியாததால் இருவரும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்த போதும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சங்கராபுரம் போலீசார் மாணவர்கள் இழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment