Miscreants broke the lock of the house and stole 50 pieces of gold jewellery

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(72). மூதாட்டியான இவர் மகன் உயிரிழந்த நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த பின்பு தற்பொழுது தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ராஜாமணிக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் இருந்து வருவதால் அவர் இரவு நேரங்களில் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்குவது வழக்கம்.

Advertisment

இந்த நிலையில் நேற்று(10.6.2024) இரவு வீட்டில் தனியாக தூங்கிய நிலையில் இன்று காலை தூங்கி எழுந்து பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி பீரோ வைக்கப்பட்டிருந்த தனி அறையில் சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisment

இது குறித்து ராஜாமணி திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாயை கொண்டு பார்வையிட்ட பொழுது வீட்டின் பின்பக்கமாக இருந்த வயல் வெளிப்பகுதிக்கு சிறிது தூரம் சென்ற மோப்பநாய் சிறிது தூரத்தில் நின்றது. இதையடுத்து அந்தப் பகுதியில் திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ராஜாமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் அதை அறிந்த நபர்கள் மட்டுமே அவர் அயர்ந்து தூங்கிய பொழுது நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து 25 லட்சம் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment