Skip to main content

”நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்வார்கள்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

minsiter ma subramaniyan talks about minister senthil balaji health issue

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்தவகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பெண்களுக்கு  மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளன. இதற்காக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். பொதுவாக ஒருவருக்கு  அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். பின்னர் பொது வார்டில் இருக்க வேண்டும். வீடு திரும்பிய பின்னரும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதுபோன்ற நடைமுறை தான் செந்தில் பாலாஜிக்கும் பின்பற்றப்படுகிறது. ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய அளவிலான சிகிச்சை முறை. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளை மருத்துவர்கள் மிக சிறப்பாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருதய அறுவை சிகிச்சையை மிகச் சிறந்த இருதய மருத்துவரான ஏ.ஆர். ரகுராமன் தான் செய்துள்ளார்.

 

ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை ஒருவருக்குச் செய்தால் தான் புரியும். அப்போது தான் இது போன்ற விமர்சனங்களில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்பது உயிர் சம்பந்தப்பட்ட போராட்டம் என்றார். மேலும், அறுவை சிகிச்சை குறித்த விமர்சனத்திற்கு  “அமைச்சரின் சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பேரைச் சுற்றி வைத்துக்கொண்டா செய்ய முடியும்? ” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்