
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் ஒன்றரை வயது குழந்தை டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள நாயனசெருவு பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம்-சங்கீதா தம்பதிக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தற்பொழுது குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும் நிலையில் விவசாயியான அருள்பிரகாசம் தன்னுடைய விளைநிலத்தில் டிராக்டர் வைத்து ஏர் உழுவதற்கு முயன்றுள்ளார். அப்பொழுது டிராக்டர் பின்புறத்தில் தன்னுடைய குழந்தை இருப்பதை அறியாமல் டிராக்டரை இயக்கியதால் குழந்தை தலை டிராக்டரில் சிக்கி விபத்துக்குள்ளானது. குழந்தையை தாய் சங்கீதா தூக்கிக்கொண்டு நாட்றம்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.மேலும் குழந்தையுடைய தாத்தா முருகனிடம் குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்தும் நம்பமாட்டேன் காப்பாற்றி விடுவேன் என செவிலியர்களை தள்ளிவிட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினார். பத்து வருடமாக தவமிருந்து பெற்ற குழந்தை சிறிய கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.