திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகி இருக்கிறது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் முதற்கட்டமாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டது.
அதே சமயம் சிகிச்சையில் உள்ள சிறுமி நலமாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் கடந்த 2 நாட்களாக ஆந்திராவின் தடா, சூலூர்பேட்டை, பூடி, காரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வைத்து, குற்றவாளியைப் பிடிக்கத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் ரயில் மற்றும் சாலை மார்க்கத்திலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில், ஆந்திராவுக்குச் செல்லக்கூடிய வாகனங்கள், தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய வாகனங்களைத் தொடர்ச்சியாகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.