Skip to main content

நியாய விலை கடைக்கு நேரடியாக சென்று கரோனா நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்..!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

The ministers who went directly to the ration shop and gave the corona relief amount

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவருடைய தொகுதிக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள கடையின் ஒன்றில் உதவித் தொகையை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், “பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது.

 

அனைவருமே 12ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துவருகின்றனர். இன்றைய மனநிலையில் தேர்வு என்பது அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நோய் தாக்கத்தின் விளைவு இனிவரும் காலங்களில் எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடைபெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும்போது மாணவ மாணவிகள் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. 

 

இங்கு தேர்ச்சிபெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பு அரசு கொடுத்தால், மாணவர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியைத் தந்து அரசைப் பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்குத் தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன்மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.